ஆசியாவுக்கு முதல்முறையாக ஏறத்தாழ 3,000 பேர் பயணம் செய்யக்கூடிய ‘செலப்பிரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட 16 மாடி சொகுசுக்கப்பல் பயணம் மேற்கொண்டது.
சிங்கப்பூர் மரினா பே சொகுசுக்கப்பல் நிலையத்திற்கு நவம்பர் 25ஆம் தேதியன்று காலையில் வந்து மாலையில் அது புறப்பட்டது.
ஒரு கப்பல் புதிய துறைமுகத்திற்கு வரும்போது நடக்கும் வழக்கத்திற்கேற்ப, கப்பல் தலைவரும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மற்றும் மரினா பே சொகுசுக்கப்பல் நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நினைவுச்சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
பயணிகளை 14 நாள் பயணத்திற்காக பாலித் தீவு வழியாக டார்வின், கேர்ன்ஸ் போன்ற ஆஸ்திரேலிய நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் கப்பல், டிசம்பர் 9ஆம் தேதி சிட்னியில் தன் பயணத்தை முடித்துக்கொள்ளும்.
‘ஃபோர்ப்ஸ்’ பயண வழிகாட்டி 2023 நட்சத்திர விருதுகளில் இடம்பெற்றுள்ள ஐந்து ‘செலப்ரிட்டி க்ரூசஸ்’ கப்பல்களில் ஒன்றானது ‘செலப்ரிட்டி எட்ஜ்’. பல புதுமை அம்சங்களை இது கொண்டுள்ளது.
கடலை நோக்கிய ‘இன்ஃபினெட் வெரேண்டா’, இரண்டு மாடி மாளிகைகள், தனியார் நீச்சல் குளங்கள், கடலின் அழகை ரசித்துக்கொண்டே இளைப்பாற இடங்கள், அழகான ஓய்வறைகள், ஆரோக்கிய நீரூற்றுகள், உடற்பயிற்சிக்கூடங்கள் எனப் பற்பல வசதிகளும் இக்கப்பலில் உள்ளன.
இக்கப்பலின் புத்தாக்க அம்சங்களில் ஒன்று ‘மாயக் கம்பளம்’. கப்பல்களைப் பொறுத்தவரை உலகிலேயே வானில் மிதக்கும் முதல் நடைமேடையாகக் கருதப்படும் இது, 2ஆம் மாடியில் நடைமேடையாகவும் 15ஆம் மாடியில் மதுக்கூடமாகவும் செயல்படுகிறது.
வெவ்வேறு நாடுகளின் பலதரப்பட்ட உணவுவகைகளை வழங்கும் பல்வேறு உணவகங்களும் இக்கப்பலில் அடங்குகின்றன.
கப்பல் ‘விஆர்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகக் கூறினார் ‘செலப்பிரிட்டி க்ரூஸஸ்’ ஆசிய விற்பனை, சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநர் ஏட்ரியன் ஆவ்.
‘செலப்ரிட்டி சோல்ஸ்டிஸ்’, ‘ஃபோர்ப்ஸ்’ பயண வழிகாட்டியில் ‘ஃபோர் ஸ்டார்’ விருதைப் பெற்ற ‘செலப்ரிட்டி மில்லெனியம்’ ஆகிய சொகுசுக்கப்பல்களும் சிங்கப்பூரிலிருந்து பயணங்களை மேற்கொண்டுவருகின்றன.