தான் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கான விண்ணப்பங்களையும் வேலை அனுமதிக்கான விண்ணப்பங்களையும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்குத் தன்னால் செயல்முறைப்படுத்த முடியும் என்று துப்புரவுப் பணியாளர் ஒருவர் தன் நண்பரை நம்ப வைத்தார்.
இதனால், அந்த நண்பர் $5,000ஐ ஏமாற்றிய அந்த மாதிடம் தந்ததை அடுத்து வேலைக்கான விளம்பரங்கள் யாவும் பொய் என்பதையும் கண்டுபிடித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த ஜெயந்தி சுப்பிரமணியம், 31, ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டையுடைய ஊழியராக இருந்த ஜெயந்தி, 2021ல் ‘டிக்டாக்’ வழியாக 31 வயது இந்திய நாட்டவர் ஒருவரது அறிமுகத்தைப் பெற்றார்.
இருவரும் தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், குரல் பதிவுகள் ஆகியவற்றின் வழியாக தொடர்பில் இருந்தனர்.
ஜெயந்தி இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டு கடன்களை அடைக்க முடியாமல் தவித்தார்.
போலி வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தன் நண்பர்களை ஏமாற்ற ஜெயந்தி சதித்திட்டம் தீட்டினார். அந்தக் காலகட்டத்தில் அவர் ‘டிஎச்எல்’ நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்தார்.
தனக்குக் கூறப்பட்ட போலி வேலைவாய்ப்பை நம்பிய அந்த இந்திய ஆடவர், தனது நண்பர்கள் இருவருக்கு அந்த வேலையை வாங்கித் தரும்படி உதவி கோரினார்.
தொடர்புடைய செய்திகள்
வேலை வாங்கித் தருவதற்காகவும் வேலை அனுமதி விண்ணப்பத்தைச் செயல்படுத்துவதற்காகவும் ஜெயந்தி அந்த இந்திய நாட்டவரிடமிருந்து $5,000ஐ பெற்றதாகக் கூறப்பட்டது.
இருப்பினும் கூடுதல் பணம் தேவைப்படுவதாக ஜெயந்தி கூறியதால் அந்த ஆடவர் சந்தேகப்பட்டு வேலை அனுமதி ஆவணங்களைத் தரும்படி கேட்டார்.
அதனைத் தர ஜெயந்தி மறுக்கவே அவர்மீது அக்டோபர் 1ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளிக்கப்பட்டு மூன்று நாள்களுக்குப் பிறகு ஜெயந்தியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

