சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்காத நாடுகள் மிகச் சில. அவற்றில் சிங்கப்பூரும் ஒன்று.
இத்தகைய வரிகளை விதிக்கும் நாடுகள் 100க்கும் மேற்பட்டவை என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நிலையில், சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மதுபானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவை மீது வரி விதிக்க, அல்லது வரியை அதிகரிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகியவை இத்தகைய வரியை விதிக்கின்றன.
“அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் பேர் மதுபானம் அருந்துவதால் உயிரிழக்கின்றனர். எட்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் உயிரிழக்கின்றனர். மதுபானம், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானம் ஆகியவற்றுக்கு வரி விதிக்கும் நடைமுறை இருந்தால் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்,” என்று உலக சுகாதார நிறுவனம் அதன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் தங்களின் சத்தான உணவுமுறையில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளத் தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வருகிறது.
இருப்பினும், சிங்கப்பூரர்கள் நாளுக்குச் சராசரியாக 12 தேக்கரண்டி அளவு சர்க்கரையை உட்கொள்வதாக சுகாதார மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த அளவில் பாதிக்கு மேல் பானங்களிலிருந்து வருவதாகவும் கூறப்பட்டது.