பொங்கோலில் கார் ஒன்றின்மீது பொதுப் பேருந்து திங்கட்கிழமை மோதிய விபத்தில் காயமுற்ற சிறுவன் ஒருவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.
எஸ்ஜி ரோடு விஜிலாண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று, சாலைச் சந்திப்பில் கறுப்பு நிற காரின் இடதுபக்கம் மீது எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து மோதுவதைக் காட்டியது. அப்போது போக்குவரத்து விளக்கு அந்த காருக்குச் சாதகமாக பச்சையிலும் பின்னர் மஞ்சள் நிறத்திற்கும் மாறியது.
பொங்கோல் சாலை, காம்பஸ்வேல் ஸ்திரீட் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து திங்கட்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காரில் இருந்த 12 வயதுச் சிறுவன் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தான்.
இந்த விபத்தில் மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, விபத்தில் காயமுற்ற கார் ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த பயணியின் நலனில் தமது நிறுவனம் முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார்.
தமது நிறுவனம் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தேவையான உதவி அளித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் வாகனமோட்டிகளுக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட எஸ்பிஎஸ் டிரான்சிட், காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறது.