அடுத்தாண்டு வரவுள்ள பொருள், சேவை வரி உயர்வு, விலைவாசி உயர்வு, அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள செலவின உயர்வை டாக்சி ஓட்டுநர்கள் சமாளிக்க உதவும் வகையில் டாக்சி பயணத் தொடக்க கட்டணம் உயரவுள்ளது.
கம்ஃபர்ட்டெல்குரோவின் லிமோசின் எனப்படும் சொகுசு டாக்சி வாகனங்களைத் தவிர, மற்ற டாக்சிகளின் தொடக்க கட்டணம் $0.50 காசுகள் உயரும். அத்துடன், தூர அடிப்படையிலான கட்டணம், காத்திருப்பு நேர கட்டணம் ஆகியவை ஒரு காசு உயர்ந்து 0.26 ஆக இருக்கும்.
“இந்த மாற்றத்திற்குப் பிறகு, சாதாரண, உச்சநேரம் அல்லாத, 10 கிலோமீட்டர் டாக்சி பயணம் ஒன்றின் சராசரி கட்டணம் 6.8% அதிகரித்து $13.80லிருந்து $14.74ஆக இருக்கும்,” என்று பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
லிமோசின் எனப்படும் சொகுசு டாக்சிகளின் தொடக்க கட்டணம் இப்பொழுது உள்ளதுபோல் இருக்கும். தூர அடிப்படையிலான கட்டணம், காத்திருப்பு நேர கட்டணம் ஆகியவை ஒரு காசு உயர்ந்து $0.35லிருந்து $0.36 ஆக இருக்கும்.
புதிய கட்டணங்கள் யாவும் டிசம்பர் 13ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை உச்சநேர கூடுதல் கட்டணம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டு 5.00 மணியிலிருந்து இரவு 11.59 வரை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாலை உச்சநேர கட்டண உயர்வு திங்கள் முதல் ஞாயிறு வரை, பொது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாள்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மாலை உச்சநேரம் 6.00 மணிக்கு தொடங்குகறிது.
இத்துடன், சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.59 வரை புதிய உச்சநேர கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.