மின்சிகரெட்டுகளை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் கடத்திய மலேசிய லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 40 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாறன் சேகரிடமிருந்து 750 மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான 3,150 பாகங்களும் கைப்பற்றப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் $73,000 என்று கூறப்படுகிறது.
துவாஸ் சோதனைச்சாவடியில் அக்டோபர் 20ஆம் தேதியன்று நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்கப்பூருக்கு வாரம் இருமுறை அழகுச்சாதனப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக 31 வயது மாறன் வருவது வழக்கம் என்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இந்தச் சட்டவிரோதப் பொருள்களைக் கடத்தியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
விநியோகம் தொடர்பான தகவல்களைத் தன் முதலாளியிடமிருந்து பெற்றதும் மாறன் பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.
அனைத்து சட்டவிரோதப் புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.