சிங்கப்பூரை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் ஒன்று லிட்டில் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வெடித்த கலவரம்.
ரேஸ் கோர்ஸ் ரோட்டில் நேர்ந்த பேருந்து விபத்தில் இந்திய கட்டுமான ஊழியர் சக்திவேல் குமரவேலு, 33, உயிரிழந்ததை அடுத்து அங்கு மூண்ட கலவரம், சுதந்திரமடைந்த சிங்கப்பூர் ஐம்பது ஆண்டுகளாகக் கண்டிராதது.
அதன் பாதிப்பும் அக்கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களும் பல. கலவரம் நடந்த 10 ஆண்டுகளில் அச்சம்பவத்தையும் அதன் பின்விளைவுகளையும் நினைவுகூர்கிறது தமிழ்முரசு.
சம்பவத்தைப் பார்த்தவர், பாதுகாப்பை நிலைநாட்ட முயன்றவர், சம்பவம் குறித்த தகவல்களை உடனுக்குடன் செய்தியறைக்குத் தெரிவித்தவர் ஆகிய மூவரும் தமிழ் முரசின் வலையொளியில் அதுகுறித்துப் பேசுகின்றனர்.
புளோக் 661 பஃப்ளோ ரோடு, பத்தாவது மாடியில் தங்கியுள்ள ஆசிரியர் யூசுப் ரஜித், 75, தன் வீட்டின் பால்கனி வழியே எரியும் சாலையையும் கூச்சல்களையும் பார்த்தார்.
அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் கற்களால் தாக்கப்பட்டார் துணைக் காவல்படை அதிகாரி நாதன் சந்திரசேகரன், 44.
கலவரத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளையும் செய்தியறைக்குக் கொண்டுவந்து தமிழ் முரசின் சிறப்புப் பிரதிக்கு தகவல் திரட்டினார் தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி.
அவரது வழிநடத்தலில் திரு யூசுப் ரஜித், திரு நாதன் சந்திரசேகரன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்த வலையொளியைக் காண விரும்புவோர் தமிழ் முரசு செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
லிட்டில் இந்தியா கலவரம் நடந்து 10வது ஆண்டை நினைவுகூரும் சிறப்புக் கட்டுரை வரும் ஞாயிறன்று தமிழ் முரசில் வெளிவரும்.