சிங்கப்பூரில் தனியார் மறுவிற்பனை வீடுகளை வாங்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் முன்னணியில் வரக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
சொத்துகளுக்கான ‘ஏபிஎஸ்டி’ எனப்படும் முத்திரைத் தாள் வரி உயர்வால் வெளிநாட்டவர்கள் இங்கு சொத்து வாங்குவது குறைந்துள்ளது. இந்த நிலை சில காலத்திற்கு தொடரும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாண்டு ஜனவரியில் தரை வீடுகள் அல்லாத தனியார் மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனையில் வெளிநாட்டவர்கள் பங்கு ஐந்து விழுக்காடாக இருந்தது.
ஏப்ரல் 27ஆம் தேதி முத்திரைத் தாள் வரி 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்ட பிறகு மே மாதத்தில் வெளிநாட்டவர்களின் பங்கு 3.7 விழுக்காட்டுக்குச் சரிந்தது.
இது, செப்டம்பரில் 1.2 விழுக்காடாகவும் அக்டோபரில் 1.1 விழுக்காடு அல்லது ஒன்பது பரிவர்த்தனைகளாகவும் சரிந்தது.
புரோப்நெக்ஸ் உள்ளடக்கம் மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் வோங் சியவ் யிங், வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய ஒன்பது பரிவர்த்தனைகளில் ஏழு பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், சுவிட்சர்லாந்து, ஓமான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்று குறிப்பிட்டார்.
தனியார்வீடு மறுவிற்பனையில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தொடர்ந்து முன்னணி வகிப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
நகரச் சீரமைப்பு ஆணையத்தின் ‘ரியாலிஸ்’ தரவுகளின்படி அதிகார வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படாத வெளிநாட்டவர்களின் பங்கு, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வெளிநாட்டவர்களுக்கான 165 மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளில் 104ஆக இருந்தது.
மே முதல் நவம்பர் 24 வரை நடந்த பரிவர்த்தனைகளில் இது 42ஆக இருந்தது.
தற்போதைய தாராள வர்த்தக ஒப்பந்தங்களின்படி அமெரிக்கா, ஐஸ்லாந்து, லிச்டென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிங்கப்பூரில் முதல் முறையாக குடியிருப்பு வீட்டை வாங்கினால் முத்திரைத் தாள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அடுத்தடுத்த சொத்துகளுக்கு மட்டுமே அவர்கள் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும்.
சொத்துச் சந்தையை தணிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் கூடுதல் முத்திரைத் தாள் வரியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்த வரிக்குப் பிறகு பிரதான மத்திய வட்டாரத்திலும் மத்திய வட்டாரத்திற்கும் வெளியேயும் குறைவான தனியார் மறுவிற்பனை வீடுகளே வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்டது என்று திருவாட்டி வோங் தெரிவித்தார்.