மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான நெருக்கடியைத் தவிர்க்க மருந்தகங்களை நாடுமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லேசானது முதல் மிதமானது வரையிலான கொவிட்-19 நோய் அறிகுறியுடன் இருப்போர் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள பொது மருந்தகத்திற்கோ பலதுறை மருந்தகத்திற்கோ செல்லுமாறு பொது மருத்துவமனைகள் வலியுறுத்தி உள்ளன.
இத்தகைய மருந்தகங்கள், தேவைப்பட்டால், வெளிநோயாளிப் பராமரிப்புக்காக அவசர மருத்துவப் பிரிவு அல்லது சிறப்பு மருத்துவர்களை நாடுமாறு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும்.
கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் இப்படி ஒரு தகவலை மருத்துவமனைகள் வெளியிட்டு உள்ளன.
அண்மையில் நுரையீரல் தொற்றுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மூன்று இரவுகள் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய 70களில் உள்ள பெண் நோயாளி ஒருவர், மருத்துவமனையில் படுக்கைக்காகக் காத்திருந்தது வேதனையான அனுபவம் என்றார்.
டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32,035 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவே ஆக அதிகத் தொற்று எண்ணிக்கை.
இது தொடர்பான விழிப்புநிலையை டிசம்பர் 8ஆம் தேதி சுகாதார அமைச்சு எழுப்பியது. இருப்பினும், கொள்ளைநோய்க் காலத்தில் இருந்த அளவுக்கு இது அதிகமான எண்ணிக்கை இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.
தற்போது பரவி வரும் கொவிட்-19 கிருமித் திரிபுகள், கடுமையான உடல்நலிவை ஏற்படுத்தக்கூடியவையாக அறியப்படவில்லை என்றும் அது கூறியது.
சென்ற வாரம் கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் அன்றாட சராசரி எண்ணிக்கை 225 என்றும் அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 136 ஆக இருந்தது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அதேபோல, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கொவிட்-19 நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 1லிருந்து 4 ஆக அதிகரித்தது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேதி மாற்றியமைக்கப்படக் கூடிய உள்நோயாளி அறுவை சிகிச்சைகளை இரவு படுக்கையில் தங்கத் தேவையிராத பகல்நேர சிகிச்சையாக மாற்றியுள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஜெஃப்ரி சாமுவல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அனுப்பிய பதிலில் தெரிவித்தார்.
அத்தகைய அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பராமரிப்புக்காக வைக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் சில நோயாளிகளுக்கான கண்காணிப்பு நேரம் 24 மணி நேரத்துக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனைப் படுக்கைகளை காலி செய்ய இந்த நடவடிக்கை உதவுவதாகவும் அவர் சொன்னார்.
படுக்கைகள் கிடைக்காததால், அந்த மருத்துவமனையின் அவசரப் பிரிவு நோயாளிகள் சிலர், ஊட்ரம் சமூக மருத்துவமனையை இணைக்கும் பாதையில் தற்காலிகமாகப் பராமரிக்கப்படுகின்றனர்.
தேசிய பல்லைக்கழக மருத்துவ முறையின்கீழ் இயங்கும் மருத்துவமனைகளிலும் டான் டோக் செங் மருத்துவமனையிலும் சிகிச்சைபெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சீராக இருப்பதாக அவற்றின் பேச்சாளர்கள் கூறினர்.
நிலைமையை, தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.