சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் தங்குவிடுதி அறைகளை வாடகைக்கு விடும் விளம்பரங்கள் அண்மையில் சீன சமூக ஊடகத் தளங்களிலும் கெரோசல் இணையத்தளத்திலும் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர் தங்குவிடுதிகளில் குறுகியகாலத்திற்கும் நீண்டகாலத்திற்கும் அறைகள் வாடகைக்கு விடப்படுவதாக ‘சியாவ்ஹோங்ஷு’, ‘விசெட்’ போன்ற சீன சமூக ஊடகச் செயலிகளில் விளம்பரங்கள் இடம்பெற்றன.
ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தில் டிசம்பர் மாதத்தின் 19 நாள்களுக்கு $350 வாடகைக்கு அறை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இன்னொரு விளம்பரத்தில் ஒரு நாளுக்கு $45 வாடகை செலுத்த வேண்டும் என்றிருந்தது.
பல்கலைக்கழகம் தன் மாணவர்களிடம் கோரும் அறை வாடகையைக் காட்டிலும் இந்த விளம்பரங்களில் இடம்பெறும் வாடகை ஏறத்தாழ இருமடங்காக உள்ளது.
இணைய வர்த்தகத்துக்கான ‘கெரோசல்’ தளத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பிரின்ஸ் ஜியோர்ஜஸ் பார்க் ரெசிடண்ஸ் வளாகத்திலுள்ள குளிரூட்டு வசதிகொண்ட அறைக்கு மாத வாடகை $1,200 என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
பல்கலைக்கழகம் அதே அறைக்கு அதன் மாணவர்களிடமிருந்து மாத வாடகையாக $868ஐ வசூலிக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் இந்த வழக்கத்தை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தாலும் சிங்கப்பூரின் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறு தங்கள் தங்குவிடுதி அறைகளை வாடகைக்கு விட்டு லாபம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு செய்யும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகங்களில் தங்குவிடுதி அறையை வாடகைக்குப் பெறத் தடை விதிக்கப்படலாம் என்றும் மாணவர்களின் உபகாரச் சம்பளம் ரத்து செய்யப்படலாம் என்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன.
அறை எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் இத்தகைய இடங்களில் வாடகைக்குத் தங்கும் அனுபவத்தைப் பெறுவதையும் மாணவர்கள் காரணங்களாகக் கூறினர்.
என்டியு மாணவர்கள் தங்களின் தங்குவிடுதி அறைகளை ‘டெலிகிராம்’ தளத்தில் ஏலம் விடும் வழக்கம் குறித்து 2022ஆம் ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. மாத வாடகையாக $900 வரை கட்ட வேண்டும் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்ததன்படி மாணவர்கள் இதே வழக்கத்தைத் தொடர்கின்றனர் எனத் தெரியவந்தது.
இந்நிலையில், அறைகளை இவ்வாறு கள்ளத்தனமாக வாடகைக்கு விடுவோரைப் பற்றி அறிந்துள்ள மாணவர்கள் உடனே தங்களின் நிர்வாக அலுவலகங்களிடம் புகார் செய்ய வேண்டும் என்று என்டியு பேச்சாளர் அறிவுறுத்தினார்.