சிங்கப்பூரும் புருணையும் அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உணவுப் பாதுகாப்பு, பசுமை நடவடிக்கை, உலக அரங்கில் இரு நாடுகளின் குரலுக்கு கூடுதல் மதிப்பை உருவாக்குவது போன்ற அம்சங்களில் இணைந்து செயல்படவேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு குறித்து திரு வோங், புருணை தலைவர்கள், மூத்த அதிகாரிகள், மாணவர்கள் போன்றவர்களுக்கு உரையாற்றினார்.
திரு வோங்கின் உரை புருணை பிரதமர் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.
புருணையில் நடந்த 9ஆவது “இளம் தலைவர்களுக்கான திட்டம்”த்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் சிங்கப்பூர் பேரளாளர் குழு கலந்துகொண்டது.
“சிங்கப்பூரும் புருணையும் சிறு நாடுகள், உலகத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும். சிறு நாடுகளாக இருப்பதால் வேகமாக செயல்படமுடிகிறது,” என்று திரு வோங் கூறினார்.
“சிங்கப்பூர் தற்போது கடல் உணவுகளை புருணையில் இருந்து இறக்குமதி செய்கிறது. அண்மையில் முட்டைகளை புருணையில் இருந்து கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி, கோழி போன்ற மற்ற உணவுகளின் இறக்குமதி குறித்தும் இருநாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளன,” என்றும் திரு வோங் கூறினார்.
புருணையிலிருந்து அதிகமான பொருள்களை இறக்குமதி செய்வதன் மூலம் சிங்கப்பூரின் உணவு இறக்குமதியில் பன்முகத்தன்மை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.