தனது மாமனாரால் கொலைசெய்யப்பட்டவர் மரணம் அடைந்தபோது அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திரும்பப் பெற அவரது பெற்றோருக்கு எதிராக அவரின் சொத்தை நிர்வகிப்போர், வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
மறைந்த திரு துபானியின் மனைவி ஷைலர் டான் செங் செங், அவரது சகோதரி ஷெரி டான் சான் சான், அவரது முதல் மனைவி ஃபெலிஷியா கெ லெ ஹொங் ஆகியோர் அவரது சொத்துகளை நிர்வகித்து வருகின்றனர்.
திரு ஸ்பென்சர் துபானியின் தந்தை திரு ஷாம்லால் துபானி பிஸைசார் மற்றும் அவரது முன்னாள் மனைவி திருவாட்டி தாம் போ குவாய் இருவர் மீதும் அவர்கள் அந்த கைக்கடிகாரத்தைக் கோரி வழக்கு தொடுத்தனர். ரிச்சர்ட் மில்லெ என்ற பெயருடைய அந்த கடிகாரத்தின் விலை $389, 205.13 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகன் மரணம் அடைந்த நிலையில் அந்தக் கடிகாரத்தை ஸ்பென்ஸரின் நீண்டநாள் காதலியான ஜோயென் இயோ கெக் லின் என்பவரிடம் தந்தை ஒப்படைத்துவிட்டார். சொத்து நிர்வாகிகள், அந்தக் கடிகாரத்தை அக்காதலி, திருவாட்டி தாம் என்ற மறைந்தவரின் தாயாரிடம் கொடுத்துவிட்டதாகவும் அதனை அந்த மாது விற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதனை திருவாட்டி தாம் மறுப்பதோடு, அக்கடிகாரத்தை மறைந்தவரின் முன்னாள் காதலியிடம் இருந்து பெறவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
திரு ஸ்பென்சரின் 2 குழந்தைகளின் தாயான அவரது நெடுநாள் காதலி ஜோயென் இயோ மீது சொத்து நிர்வாகிகள் எவ்வித குற்றமும் சுமத்தவில்லை. கடிகாரத்தை திருவாட்டி தாமிடம் கொடுத்துவிட்டதாக சத்தியப்பிரமாணம் செய்திருந்த காதலி ஜோயென் இயோ, ஸ்பென்சரின் தந்தைக்கு சாட்சியாக பெயரிடப்பட்டு அழைப்பாணை பெற்றிருந்தும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்துக்குத் தகுந்த காரணமின்றி வரவில்லை.
திருவாட்டி ஜோயென் இயோ சட்டப்படி நீதிவிசாரணைக்கு வர மறுத்ததால் அவரது சாட்சியம் செல்லாது என்று மாவட்ட நீதிபதி ஜோனதன் இங் அறிவித்தார். திரு ஸ்பென்சரின் தாயார் திருவாட்டி தாம் அந்த கடிகாரத்தைப் பெறவில்லை என்பதையும் நிராகரிக்க சாட்சியங்கள் இல்லை. எனவே, சொத்து நிர்வாகிகளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.