சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தியதற்காக தேடப்பட்ட 37 வயது சிங்கப்பூரர் ஒருவர் தென்கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி சோல் நகரில் அவரும் அவருடன் இருந்த மூன்று பெண் உதவியாளர்களும் சோல் மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு உதவியாளர்கள் சிங்கப்பூரர்கள் என்றும் 3வது நபர் வெளிநாட்டவர் என்றும் சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் உள்ள உதவியாளர்களின் கடத்தல் மற்றும் விற்பனைக்காக போதைப் பொருள்களை ஒருங்கிணைத்து விநியோகம் செய்வதில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த நபர் மீதும் அவரது வெளிநாட்டு உதவியாளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, தென் கொரியாவில் சிறையில் அடைக்கப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்தது.
சோலில் சிறைத் தண்டனை முடிந்ததும் அவரை சிங்கப்பூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதன் பிறகு சிங்கப்பூரில் அவர் போதைப் பொருள்களை விநியோகித்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மேலும் கூறியது.
2021 நவம்பர் 12ஆம் தேதி அவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதாக குடிநுழைவுத் துறை பதிவுகள் காட்டுகின்றன.
சந்தேக நபர் தமது போதைப் பொருள் கடத்தல் செயல்களுக்கு தென்கொரியாவை தளமாகக் கொண்டு செயல்பட்டுள்ளார்.
இதையடுத்து சிங்கப்பூரின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, கூட்டாக விசாரணை நடத்துவற்காக தென்கொரியாவின் தேசிய உளவுத் துறையுடன் தொடர்புகொண்டது.
அந்த சந்தேக நபர் அனைத்துலக போதைப் பொருள் விற்பனை நிறுவனத்துக்கு தலைவராக இருந்தார் என்றும் டெலிகிராம் வழியாக போதைப் பொருள்களை அவர்கள் விற்றதாகவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.