இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிங்கப்பூரில் வெங்காய விலை உயரத் தொடங்கியுள்ளது.
கோதுமை, அரிசி என இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் சில பொருள்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்ட வரிசையில், தற்போது வெங்காயத்திற்கும் டிசம்பர் 8 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மாதம் வரை சராசரியாக 3 கிலோ வெங்காய மூட்டை 3 வெள்ளி முதல் 3.50 வெள்ளி வரை விற்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் உயரத் தொடங்கி, டிசம்பர் 15ஆம் தேதியன்று $5.00 முதல் $5.50 வரை விற்கப்பட்டது.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த தேக்கா வட்டார கடையின் ஊழியர் திரு ஆனந்த், “தற்போது விநியோகம் செய்பவர்களின் கையிருப்பிலிருந்து வெங்காயம் வருவதால் தட்டுப்பாடு இல்லை. சற்று விலை ஏற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் இன்னும் விலை ஏறலாம்,” என்றார்.
வாரத்திற்கு மூன்று நாள்கள் இந்தியாவிலிருந்து வரும் வெங்காயத்தை வாங்குவது வழக்கம் என்று சொல்லும் மற்றொரு கடை உரிமையாளர் செல்வகுமார் (50), “பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், சீன என பல நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதியாகும். எனவே மக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால் குறிப்பாக இந்திய வெங்காயம் வாங்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ஜனவரி வரை தொடர்ந்து விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்,” என குறிப்பிட்டார்.
நவம்பர் முதல் ஜனவரி வரை பொதுவாகவே வெங்காய விலை ஏறுவது வழக்கம்தான் என்கிறார் கிளைவ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள கடையின் ஊழியர் பாலகிருஷ்ணன் (46). எதிர்பாராத அளவு விலையேற்றம் எனச் சொல்லும் அளவு இல்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
பஃப்ளோ ரோட்டில் கடை நடத்தும் சின்னத்துரை கூறுகையில், சில மாதங்கள் முன்பு விலையேற்றம் கண்ட தக்காளியைத் தொடர்ந்து, இந்திய சமையலின் அத்தியாவசிய பொருளான வெங்காய விலை உயர்ந்துள்ளது மக்களுக்குக் கவலையளிக்கும் ஒன்றுதான் எனக் கருதுகிறார்.
கேலாங் பகுதி கிடங்கிலிருந்து வெங்காயத்தை லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்யும் ராஜகோபாலன், “அங்கிருந்து தடை விதிக்கப்படுவதற்கு முன் ஏற்றப்பட்ட வெங்காயம் வந்து சேர்ந்துள்ளது. டிசம்பர் மாத இறுதி வரை விநியோகிக்கும் அளவு கையிருப்பு உள்ளது. ஆனாலும் மார்ச் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. பருவமாற்றம் ஏற்பட்டு தடை முன்பே விலக்கப்பட்டால் நிலைமை மீண்டும் சீராகும்,” எனத் தெரிவித்தார்.
சின்ன வெங்காயம் பொதுவாக தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து வருவதால் அதில் மாற்றமில்லை எனவும், பெரிய வெங்காயத்தின் தடையும், விலையேற்றமும் மார்ச் வரை நீடிப்பதால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.