மொரிஷியஸ் தீவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2023

மொரிஷியஸ் தீவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2023

2 mins read
1973e0cc-cf7f-4fda-9b7c-26d4baaed350
14வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள். - படம்: சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம்

மொரிஷியஸ் தீவில் இம்மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு கற்பித்தல் தொடர்பாகப் படைத்திருந்தனர்.

சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியில் 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, தற்போது 14வது முறையாக நடந்தேறியுள்ளது.

மொரிஷியஸின் மோக்கே நகரில் அந்த மாநாடு டிசம்பர் 8 முதல் 10 வரை நடந்தேறியது.

ஒவ்வொரு மாநாட்டையும் உலகத் தமிழாசிரியர் பேரவை என்ற அமைப்புடன் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் ஆசிரியர் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

பேச்சுத்தமிழை மையப்படுத்திய கற்றல், கற்பித்தல் என்பது இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.

இந்தியா, மலேசியா, பிரிட்டன், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 350 பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரிலிருந்து 65 பேராளர்கள் கலந்துகொண்டனர்.

பாலர் பள்ளி ஆசிரியர்கள், தேசிய கல்விக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி அமைச்சு அதிகாரிகள், ஆசிரியர் கலைக் கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆசிரியர்கள் ஆகியோர் பேராளர்களில் அடங்குவர்.

தமிழ்மொழிக் கற்றல், கற்பித்தல் தொடர்பாக 25 படைப்புகள் சிங்கப்பூரின் சார்பில் படைக்கப்பட்டன.

சிங்கப்பூரில் தாய்மொழிக் கொள்கை, அதாவது தாய்மொழிகளை வாழும் மொழிகளாக வைத்திருத்தல் என்ற கொள்கைக்கு ஏற்ப மாநாட்டின் கருப்பொருள் இருப்பதாக சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் தெரிவித்தார்.

மொரிஷியசில் தமிழர்கள் நிறைய இருப்பதாகக் கண்ட திரு தனபால் குமார், அவர்களிடையே தமிழ்ப்புழக்கம் தற்போது குறைவாக இருந்தாலும் தமிழார்வம் அவர்களுக்கு உள்ளதைச் சுட்டினார்.

மாநாட்டில் பிற நாடுகளில் தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்ததாக மாநாட்டில் பங்கேற்ற தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் வள்ளியம்மை மெய்யப்பன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்