மோசடியில் 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $1 மில்லியனை இழக்க இருந்த மேபேங்க் வாடிக்கையாளர்களை அந்த வங்கி தலையிட்டு காப்பாற்றியுள்ளது.
சிங்கப்பூர் காவல் துறையுடன் மோசடி தொடர்பான விவகாரங்களில் தலையிடத் தொடங்கிய மேபேங்க் வங்கி மார்ச் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை 14 மோசடிச் சம்பவங்களில் தலையிட்டு வாடிக்கையாளர்கள் $975,800 இழப்பதைத் தடுத்துள்ளது.
இதில் ஒரு சம்பவத்தில், மோசடியில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டவுடன் மேபேங்க் ஜூரோங் பாயிண்ட் கிளையில் உள்ள ஊழியர் ஒருவர் விரைந்து செயல்பட்டார்.
இதனால் அந்த வாடிக்கையாளர் அவரது வாழ்நாள் சேமிப்பான $338,000ஐ அரசு அதிகாரி என்று கூறிய ஒருவரிடம் ஏமாந்து இழப்பதை தடுத்துள்ளார் அந்த வங்கி ஊழியர். I
அந்த வாடிக்கையாளர் ஒரு 61 வயது மாது. அவர் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி கேஷியர்ஸ் ஆர்டர் எனப்படும் ஒருவருக்கு ரொக்கமாக வழங்கும் காசோலையை $130,000க்கு வங்கியில் கோரிக்கை விண்ணப்பித்தார்.
இது குறித்து வங்கி ஊயழியரான திருவாட்டி அமலீனா துருவிக் கேட்டதில் அந்த வாடிக்கையாளர் பதற்றமடைந்தார்.
வாடிக்கையாளர் பதற்றமடைந்ததையும் தொகையின் அளவு பெரிதாக இருப்பதையும் அறிந்த அமலீனா அந்த வாடிக்கையாளரை தனியறைக்கு அழைத்து அவரது கோரிக்கை குறித்து மேல் விவரங்கள் பெற முற்பட்டார்.
முதலில் தமது கோரிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திய அந்த வாடிக்கையாளர் பின்னர் காவல் துறை ஆய்வாளர் எனக் கூறிக்கொண்ட ஒருவரின் உத்தரவின் பேரில் அவ்வாறு செயல்படுவதை ஒப்புக்கொண்டார். அந்த மோசடி நபர் கள்ளப் பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் தாம் ஒரு சந்தேக நபர் என்று கூறியதாக வாடிக்கையாளர் தெரிவித்தார்.
மோசடிப் பேர்வழி வாடிக்கையாளரின் குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
அந்த வாடிக்கையாளர் சம்பவத்துக்கு முதல் நாளன்று வேறொரு வங்கிக் கணக்கிலிருந்து அந்த மோசடி நபருக்கு ஏற்கெனவே பணத்தை கேஷியர்ஸ் ஆர்டர் மூலம் கொடுத்துள்ளது தெரியவந்தது.
அத்துடன், மேலும் இரண்டு வங்கிக் கணக்குகளிலிருந்து அந்த மாது மோசடிக்காரருக்கு பணம் கொடுக்க கேஷியர்ஸ் ஆர்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது.
இதை அறிந்த அமலீனா மேபேங்கின் வங்கி மின்னிலக்க மோசடிப் பிரிவுக்கு விரைந்து தகவல் தந்தார். அவர்கள் அந்த இரண்டு கேஷியர்ஸ் ஆர்டர் மூலம் எடுக்கவிருந்த பணத்தையும் மாதின் வங்கிக் கணக்கிலேயே வைத்திருக்கும்படி அறிவுறுத்தி மாது அந்தப் பணத்தை இழக்காமல் பாதுகாத்தனர்.
மாது அந்த இரண்டு கேஷியர்ஸ் ஆர்டர்கள் மூலம் இழக்கவிருந்த தொகை $208,000.