பேருந்திற்குள் டுரியான் பழத்தைக் கொண்டுவரக்கூடாது என்று நினைவூட்டப்பட்ட பெண் ஒருவர், உடனே அதை சாலையில் வீசிய காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
டிசம்பர் 15ஆம் தேதி, எஸ்ஜிஃபாலோஸ்ஆல் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது தொடர்பான காணொளி பகிரப்பட்டுள்ளது.
காணொளியை வாசகர் ஒருவர் அனுப்பியதாக அது குறிப்பிட்டுள்ளது.
காணொளியில், பயணிகள் (நடுத்தர வயதுடைய ஆணும், பெண்ணும்) இருவரிடம் பேருந்து ஓட்டுநர் பேசுவதைக் காணமுடிகிறது. அப்பயணிகள் டுரியான் பழங்களைக் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.
டுரியான் பழங்களைப் பார்த்த ஓட்டுநர், பேருந்திற்குள் அவற்றைக் கொண்டுவர அனுமதியில்லை என்று பயணிகளிடம் கூறியதாக ஷின்மின் நாளேடு தெரிவித்துள்ளது.
இதையடுத்து பயணிகள் இருவரும் பேருந்திலிருந்து இறங்க முனைந்தனர். ஆனால் ஆடவர் இறங்குவதற்குச் சிறிது முன்பாக, “இறங்க வேண்டாம், இறங்க வேண்டாம்,” என்று கூறிய அப்பெண், மிக இயல்பாக டுரியான் அடங்கிய பிளாஸ்டிக் பையைச் சாலையில் வீசினார். பிறகு அமைதியாகத் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.
அப்பெண்ணின் செயல் குறித்து இணையவாசிகள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
டுரியான் பழங்கள் கடுமையான வாசம் உள்ளவை என்பதால் சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் அவற்றைக் கொண்டுசெல்ல அனுமதியில்லை என்பதை ஏஷியாஒன்.காம் இணையத்தளம் சுட்டியது.