உலகம் முழுவதும் உள்ள காடுகளில் 1,700க்கும் குறைவான முதிர்ச்சியடைந்த ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பாடும் பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவற்றில் மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றன.
இதனால் பாடும் பறவைகளுக்கு சிங்கப்பூர் நல்ல வாழ்விடமாக உள்ளது.
இந்தோனீசியா, தாய்லாந்து, மியன்மார் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாடும் பறவைகள் வசித்து வருகின்றன.
‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பறவைகள் மெல்லிய செழுமையான குரலுக்குப் பெயர்போனது. ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூண்டில் அடைக்கப்பட்டு இப்பறவைகள் விற்கப்படுவதால் உலகம் முழுவதும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் அதன் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்காக சிங்கப்பூரில் தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் குழு, வழிகாட்டி பறவைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடும்.
தேசிய பூங்காக் கழகம், என்எஸ்எஸ் எனும் இயற்கை சமூகம் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், மண்டாய் வனவிலங்கு குழுமம், மண்டாய் நேச்சர் மற்றும் பர்ட்ஸ்லைஃப் இண்டர்நேஷனல் ஆகியவை குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன.
‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பாடும் பறவைகளின் எண்ணிக்கையை கண்காணிப்பது, அண்மைய அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது ஐந்து ஆண்டு செயல் திட்டங்களில் உள்ளடங்கும்.
“வெளிநாடுகளில் இத்தகைய பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து விற்கப்படுவதால் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. புலாவ் உபினில் உள்ள பறவைகளுடன் முக்கிய நிலப்பகுதிக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்துவது முக்கிய சவால்,” என்று தேசிய பூங்காக் கழகத்தின் பல்லுயிர் பிரிவின் மூத்த நிர்வாகியான லோ பிங் வென் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உபின்-காத்திப், கிராஞ்சி-மண்டாய் மற்றும் புக்கிட் தீமாவை உள்ளடக்கிய மத்திய காட்டுப் பகுதி, மத்திய இயற்கை நீர் தேக்கும் இடங்களில் ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பறவைகள் பெருமளவில் வசித்து வருகின்றன.
இந்தோனீசியா போன்ற இவ்வட்டார நாடுகளில் பாடும் பறவைகள் பிடித்து விற்கப்படுகின்றன. அந்த நிலை சிங்கப்பூரில் இல்லை. சிங்கப்பூர் அப்பறவைகளுக்கு சிறந்த வாழ்விடமாக இருந்து வருகிறது.
“சிங்கப்பூரில் கடந்த காலங்களில் பாடும் பறவைகளை வளர்ப்பது பிரபலமாக இருந்தது. ஆனால் இன்று இந்தப் போக்கு குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பறவைகள் காட்டில் வாழ வேண்டும், நமது பூங்காக்களிலும் தோட்டங்களிலும் பாட வேண்டும் என்ற எண்ணம் உள்ளூர் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நமது பசுமையான இடங்களில் ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பறவைகள் பாடுவதை இன்றும் கேட்கலாம்,” என்று திரு லோ மேலும் தெரிவித்தார்.