குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் சட்ட அமைச்சின்கீழ் செயல்படும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் உதவுகிறது. இந்த அலுவலகத்தால் பிரதிநிதிக்கப்பட்டால் கட்சிக்காரர்கள் பலனடைவார்களா என்று முதலில் ஆராயப்படும்.
அதுமட்டுமல்லாது, தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் தரப்பு நியாயமான அளவில் சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆராயப்படும்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் அமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதியுடன் ஓராண்டு ஆகிவிட்டது. அலுவலகத்தில் 15 வழக்குரைஞர்கள் உள்ளனர்.
அலுவலகத்தால் பிரநிதிக்கப்படுவோர் வழக்குரைஞர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை.
சூதாட்டம், சட்டவிரோத கும்பல், பயங்கரவாதம் உட்பட ஒருசில வழக்குகளை எதிர்நோக்குபவர்களைப் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் பிரதிநிதிக்காது.
தகுதி பெறுவோருக்குக் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அல்லது இலவச சட்டச் சேவை வழங்கும் வழக்கறிஞர் நியமிக்கப்படுவர்.
இந்தத் திட்டத்தைப் பதிவு செய்யப்பட்ட அறநிறுவனமான ‘புரோ போனோ எஸ்ஜி’ இயக்குகிறது.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நிலவரப்படி பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் 303 வழக்குகளில் கட்சிக்காரர்களைப் பிரதிநிதித்துள்ளது.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் நான்கு குழுக்களாகச் செயல்படுகின்றனர். ஒவ்வோர் குழுவிலும் மூன்று வழக்குரைஞர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் அனுபவமிக்க வழக்குரைஞர் ஒருவர் தலைமை தாங்குகிறார்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களில் ஆசிரியராக இருந்து அரசாங்க வழக்குரைஞராக மாறிய திரு வடிவழகன் சண்முகாவும் ஒருவர்.
துணை அரசாங்க வழக்குரைஞராக இருந்த 53 வயது திரு வடிவழகன், அந்தப் பணிக்கும் தற்போதைய பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் பணிக்கும் கட்சிக்காரரை நிர்வகிக்கும் முறைதான் முக்கிய வித்தியாசம் என்ற கூறினார்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞராகப் பணிபுரிய, உதவி தேவைப்படுவோருக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வு முதலில் இருக்க வேண்டும் என்று திரு வடிவழகன் தெரிவித்தார்.
இப்பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் நெருக்கடி, அவலநிலையைப் பார்த்து அனுதாபப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“எங்கள் கட்சிக்காரர்களுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைப்பதே எங்கள் இலக்கு,” என்று திரு வடிவழகன் தெரிவித்தார்.