இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட டெங்கி நோயாளிகள் கடுமையாக பாதிப்படும் அபாயத்தை அடையாளம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைச் சற்று மாற்றியமைத்தால் அது சாத்தியமாகும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையம் (என்சிஐடி) ஆகியவற்றின் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்தது.
டெங்கி நோயாளியின் ரத்தத்தில் உள்ள இரண்டு வேதிப்பொருள்கள் அவருக்குக் கடுமையான டெங்கிக் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயத்தை அடையாளம்காண உதவும் என்று ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.
இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தத்திலும் அதே வேதிப்பொருள்கள் காணப்படும் என்று அக்குழு கூறியது.
சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் மிதமான நோயாகக் கருதப்படுகிறது. இருப்பினும், டெங்கி நோயாளிகளில் 15 விழுக்காட்டினர் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும். அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். தற்போதைய டெங்கிப் பரிசோதனை முறைகள் அந்நோயின் கடுமையைக் கண்டறிய நீண்ட நேரம் எடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.