மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகள், குடிநுழைவு சோதனைகளை முடிக்க ஏறக்குறைய மூன்று மணி நேரம் காத்திருக்க நேரிடலாம் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் காரணமாக நீண்ட வாரயிறுதி விடுமுறை வருகிறது. இதனால் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரண்டு சோதனைச்சாவடிகளிலும் கடும் வாகன நெரிசலை எதிர்பார்ப்பதாக ஐசிஏ தெரிவித்தது.
நீண்ட வாரயிறுதி நாள்களுக்கு முன்பே இரண்டு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டியிருக்கிறது.
டிசம்பர் 15 முதல் 17 வரையிலான வாரயிறுதியில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றனர். இது, ஒரு நாளில் 435,000 பயணிகள் கடந்து சென்றதற்கு ஈடாகும்.
இது, 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால் 30,000 பயணிகள் அதிகமாகும்.
இதற்கிடையே மத்திய கிழக்கு நிலவரத்தை முன்னிட்டு சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஐசிஏ வலுப்படுத்தியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில் போர் வெடித்தது.
மலேசிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டரிங்’ இணையத்தளத்தின் வழியாக இரண்டு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நிலவரத்தைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புக்கிட் தீமா மற்றும் ஆயர் ராஜா விரைவுச்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள விரைவுச்சாலை கண்காணிப்பு மற்றும் ஆலோசனை அமைப்பின் வழியாகவும் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் ஐசிஏயின் ஃபேஸ்புக் பக்கம், ‘எக்ஸ்’ கணக்கு மற்றும் உள்ளூர் வானொலி நிலையங்களான ‘கிஸ்95, ‘ஒன் எஃப்எம் 91.3’, ‘96.3 ஹாவோ எஃப்எம்’, ‘யுஎஃப்எம்100.3’ ஆகியவற்றில் போக்குவரத்து நிலவரம் வெளியிடப்படும்.
சோதனைச்சாவடிகளுக்கு இட்டுச்செல்லும் முக்கிய சாலைச் சந்திப்பு மற்றும் சாலைகளில் சாலை ஒழுங்கை உறுதிசெய்ய போக்குவரத்து காவல்துறையினருடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஐசிஏ கூறியது.
வரிசையைத் தாண்டி முன்பக்கமாக வரும் வாகனமோட்டிகள் மீண்டும் வரிசையில் வருவதற்கு திருப்பியனுப்பப்படுவர்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார்கள் மலேசியாவுக்குச் செல்வதற்கு முன்பு முக்கால் பங்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பியிருக்க வேண்டும் என்பதையும் ஆணையம் நினைவூட்டியது.
அப்படி நிரப்பாதவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.