சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் பயணிகளுக்குக் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு செல்வதற்கு மூன்று மணி நேரம் இருக்கும்போது பயணப் பெட்டிகளை விமானத்துக்கு அனுப்பிவைக்கும் வசதி தயாராகிவிட்டது.
அது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்குகிறது.
விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே பயணிகள் பலர் பயணப் பெட்டிகளை முனையங்களில் பதிவு செய்து ஒப்படைத்துவிடுகின்றனர். அவ்வாறு ஒப்படைக்கப்படும் பயணப் பெட்டிகளை உயரம், எடை வாரி தானியங்கி பாரந்தூக்கிகள் பயணப் பெட்டிகளை அந்தந்த வைப்பிடங்களில் வைத்துவிடும்.
பிறகு விமானம் புறப்பட்டுச் செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகத் தயாராகும்போது பயணப் பெட்டிகளை அந்தத் தானியங்கி பாரந்தூக்கிகள் வைப்பிடங்களிலிருந்து எடுத்து விமானத்துக்கு அனுப்பிவைக்கும்.
இந்தப் புதிய வசதி, சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2க்கு அருகில் உள்ளது. அது நான்கு ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் பரப்பளவு கொண்டது.
ஒவ்வொரு நாளும் 1.2 நீளமுள்ள சறுக்குப் பாதையில் சராசரியாக 4,200 பயணப் பெட்டிகள் விமானங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 33,000க்கும் மேற்பட்டோர், பயண நேரத்துக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஓய்வெடுக்கும் பகுதிக்கு சென்று தங்கள் பயணப் பெட்டிகளை ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 6,000ஆக இருந்தது.
பயணிகள் எந்த விமானச் சேவையில் பயணம் செய்கிறார்கள் என்பதை பொறுத்து ஜுவல் ஒய்வெடுக்கும் பகுதிக்குச் செல்லலாம்.
வழக்கமாக பயண நேரத்துக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருக்கும்போது பயணிகள் பதிவு செய்து பயணப் பெட்டிகள் ஒப்படைக்கலாம்.
பயண நேரத்துக்கு மூன்று மணி நேரத்துக்கும் முன்பாகவே பதிவு செய்து பயணப் பெட்டிகளை ஒப்படைக்கும் வசதியை தற்போது 16 விமானச் சேவைகள் வழங்குகின்றன.
இதற்கு முன்பு பத்து விமானச் சேவைகள் மட்டுமே இந்த வசதியை வழங்கின.