சிங்கப்பூரின் உயர்நிலைக் கல்வியில் அடுத்த ஆண்டு முதல் இடம்பெறவிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்துக்காக இவ்வாண்டு இறுதியாண்டுத் தேர்வு எழுதிய தொடக்கநிலை 6 மாணவர்கள் முதல்முறையாக மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை வழக்கநிலை (தொழில்நுட்பம்), வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), விரைவுநிலை ஆகியவற்றின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண் வரம்புகள் வரையறுக்கப்பட்டன.
புதிதாக நடப்புக்கு வரும் வகைப்பாட்டு முறையின்படி வழக்கநிலை (தொழில்நுட்பம்) குழு 1 எனவும் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) குழு 2 எனவும் விரைவுநிலை குழு 3 எனவும் அடையாளம் காணப்படும்.
உதாரணத்திற்கு, குழு 3க்கு அனுப்பப்படும் மாணவர்கள் தங்களின் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் 4 முதல் 20 வரையிலான மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றிருப்பர். அத்துடன் உயர்நிலை 1ல் பெரும்பாலான பாடங்களை ‘ஜி3’ நிலையில் பயில்வர். இது தற்போதைய விரைவுநிலைக்கு ஒப்பாகும்.
மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தங்களின் முதல் மூன்று உயர்நிலைப் பள்ளித் தெரிவுகளில் ஒன்றைப் பெற்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தங்களின் ஆறு தெரிவுகளில் ஒன்றைப் பெற்றவர்கள் 90 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டது.