புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை நேரம்வரை கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும்.
அந்த நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சாலைகள் மூடப்படுவதும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரினா பே பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் திரளான பொதுமக்கள் கூட்டத்தை எதிர்பார்க்கின்றனர். இது கொள்ளைநோய் காலத்தில் திரண்ட 500,000 பேர் அளவுக்கு இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மரினா பே பகுதிக்கு அருகிலுள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினர், துணைக் காவல் படையினர், பாதுகாவலர்கள் ஆகியோர் கூட்டத்தைச் சமாளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கை விளக்கியது.
அன்று காவல் துறைப் பிரிவுகளுடன், சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம், அதிரடி நடவடிக்கைத் தளபத்தியம், பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியம், கரையோரக் காவல் படை, போக்குவரத்து காவல்துறை, ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றுக்காவல் பணி மேற்கொள்வர்.
இவர்களுடன், அவசரநிலை பிரிவினரும் வான்வெளி வழியாக கண்காணிப்பு மேற்கொள்ளும் காவல் பிரிவினரும் இணைவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தில் 700 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும், புதிய ஆண்டை வரவேற்க எத்தனை காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என்பது தெரிவிக்கப்படவில்லை.