வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் ஒரு சுவாரசியமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 6, 7, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ‘சூரியன்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்துகொள்ளுதல், கிராஞ்சி பண்ணையை பார்வையிடுதல், இலவசமாக கைவினைப் பொருள்களை உருவாக்குதல், பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் போன்ற அனுபவங்கள் பங்கேற்பவர்களுக்கு காத்திருக்கின்றன.
நடைபெற இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கட்டணம் இலவசம்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நிகழ உள்ள பொங்கல் கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, பிப்ரவரி 17ஆம் தேதி அன்று ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூர்’ எனும் பகிர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மலையாளச் சமூகத்தினர், தங்கள் பாரம்பரியத்தைப் போற்றும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது புகைப்படத்தை பகிரலாம்.
சிங்கப்பூரில் உள்ள மலையாளச் சமூகத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. அவை 2024 செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
மேல்விவரங்கள் அறிய, பொதுமக்கள் இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையத்தளத்தை நாடலாம்.