வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் இங்கு சட்டவிரோதமாக பல மருந்தகங்களில் வேலை செய்ததற்காக சிங்கப்பூர் மருத்துவக் கழகம் அவருக்கு $50,000 அபராதம் விதித்து உள்ளது.
டாக்டர் குவெக் கியான் கெங் எனப்படும் அவருக்கு சிங்கப்பூர் சுகாதாரச் சேவையில் துணை ஆலோசகராக வேலை செய்ய எம்பிளாய்மெண்ட் பாஸ் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
ஆயினும், இரண்டரை ஆண்டு காலம் ஒரு முழுமையான மருத்துவர்போல அவர் வேலை செய்தார். அவ்வாறு வேலை செய்வது சட்டவிரோதம்.
இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள 25 வெவ்வேறு மருந்தகங்களில் மருத்துவராக வேலை செய்து 2016 நவம்பர் முதல் 2019 மே வரை $331,500 சம்பாதித்தார்.
முறையான வேலை அனுமதி இன்றி சுயதொழில் மருத்துவராக வேலை செய்த குற்றத்துக்காக ஏற்கெனவே 2021 ஜூன் மாதம் அவர் தண்டிக்கப்பட்டார். அப்போது அவருக்கு $70,000 அபராதம் விதிக்கப்பட்டது.

