தனியார் வாகனங்களும் பயன்படுத்த தேக்காவில் புதிய நிறுத்துமிடங்கள்

தனியார் வாகனங்களும் பயன்படுத்த தேக்காவில் புதிய நிறுத்துமிடங்கள்

2 mins read
9b2a97de-8f36-4853-b787-93d5df9c37e5
தேக்கா நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை புளோக் 661ன் அருகே உள்ள டாக்சி நிறுத்தத்தில் இனி தனியார் அல்லது சொந்த வாகனங்களையும் நிறுத்தலாம். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

தேக்கா நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை புளோக் 661ன் அருகே உள்ள டாக்சி நிறுத்தத்தில் இனி தனியார் வாடகை கார் அல்லது சொந்த வாகனங்களையும் நிறுத்தலாம்.

அந்த இடத்தில் டாக்சிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த நிறுத்துமிடங்கள் ஏழில் மூன்று நீக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்குப் பதிலாக, தனியார் வாடகை அல்லது சொந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடிய இரண்டு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலப் போக்குவரத்து வாரியத்துடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சரும் தஞ்சோங் பாகார் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆல்வின் டான் வியாழக்கிழமை (டிச. 28) தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .

இந்த மாற்றம் தங்களுக்குப் பெரும் பயனளிப்பதாக அவரது பதிவின்கீழ் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இதற்கு முன்பு, தனியார் வாகனச் சேவையைப் பயன்படுத்துவோர் பஃப்லோ சாலை புளோக் 664க்குச் செல்ல வேண்டியிருந்தது.
இதற்கு முன்பு, தனியார் வாகனச் சேவையைப் பயன்படுத்துவோர் பஃப்லோ சாலை புளோக் 664க்குச் செல்ல வேண்டியிருந்தது. - படம்: ரவி சிங்காரம்

“இனி கனமான பொருள்களைத் சுமந்தபடி புளோக் 664 வரை செல்லத் தேவையில்லை,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஒருவர்.

“மிகவும் தேவைப்பட்ட மாற்றம். மிக்க நன்றி,” என்று மற்றொருவர் பதிவுசெய்தார்.

ரேஸ் கோர்ஸ் சாலைக்குச் செல்லும் மக்களும் இம்மாற்றத்தை வரவேற்றனர்.

“‘கிரேப்’, ‘கோஜெக்’, ‘ரைட்’ போன்ற செயலிகளில் தனியார் வாகனங்களே பல நேரங்களில் கிடைப்பதால் இது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்,” என்றார் பயணி திலகா, 41.

கட்டணம் மலிவு என்பதால் பெரும்பாலும் அந்தச் செயலிகளைப் பயன்படுத்துவதாகக் கூறினார் திலகா.

“இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் நடுச் சாலைக்குச் சென்று ஏற வேண்டியிருக்கும்,” என்றார் தனியார் வாகனச் சேவையைப் பயன்படுத்தும் சேகர், 52.

வெள்ளிக்கிழமை தமிழ் முரசு நிருபர் அந்த டாக்சி நிறுத்தத்திற்குச் சென்றபோது, தனியார் வாகன ஓட்டுநருக்கும் டாக்சி ஓட்டுநருக்கும் இடையே யார் அங்கு வாகனத்தை நிறுத்துவது என்பதன் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மற்றொரு தனியார் வாகன ஓட்டுநர் நடுச் சாலையில் நிறுத்தி ஒரு பயணியை ஏற்றிச் சென்றார்.

புதிய நடைமுறை அனைவருக்கும் பழக்கமாகும்வரை இத்தகைய சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார் செயலாக்க மேலாளராகப் பணியாற்றும் சுப்ரமணியன், 42.

“வாரநாள் பிற்பகல் வேளைகளில் வரிசையாக நிற்கும் டாக்சிகளுக்குப் பஞ்சமில்லை.

“ஆனால் இரவு வேளைகளிலும் வார இறுதிகளிலும் கூட்டம் அலைமோதும்போது பலரும் நிறுத்தத்தில் காத்திருக்காமல் தனியார் வாகனச் சேவைகளைப் பயன்படுத்துவர். அப்போது இவ்விரு நிறுத்துமிடங்கள் பெருமளவு உதவும்,” என்றார் சுப்ரமணியன்.

இதற்கு முன்பு, தனியார் வாகனச் சேவையைப் பயன்படுத்துவோர் பஃபலோ சாலை புளோக் 664க்குச் செல்ல வேண்டியிருந்தது.

இனி அங்கு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்ப்பதாகத் தமது சமூக வலைத்தளப் பதிவில் திரு ஆல்வின் டான் குறிப்பிட்டார்.