வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) பழைய குடியிருப்புக் கட்டடங்களில் வசிப்போருக்கே டெங்கி தொற்றும் அபாயம் அதிகம் உள்ளதென ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிக வயதான வீடுகளின் வடிவமைப்பும் அவற்றின் தேய்மானச் சிதைவுகளும் கொசுப்பெருக்கத்துக்குத் துணைபுரிவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தபட்சம் 29 ஆண்டு பழைமை வாய்ந்த வீவக குடியிருப்புக் கட்டடங்களில் பதிவான டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை புதிய கட்டடங்களில் பாதியளவே இருந்தது கண்டறியப்பட்டது.
கட்டடங்களின் சுற்றுப்புறமும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காரணிகளும் டெங்கிப் பரவலைத் தூண்டுவதற்கு எவ்வாறு துணைபுரிகின்றன என்பதை இவ்விரு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த அறிவியலாளர்கள் புள்ளிவிவரத் தொகுப்பைப் பயன்படுத்தி ஆராய்ந்தனர்.
ஆறாண்டுகளாக நடத்தப்பட்ட அந்த ஆய்வு, பொது வீடமைப்புக் கட்டடங்களின் சராசரி வயது 29.1 ஆண்டுகள் எனக் கண்டறிந்தது.
புதிய வீடுகள் சிறந்த நீர் வடிகால் முறையைக் கொண்டுள்ளன. கூரையும் விளிம்புகளும் சாய்வாக அமைக்கப்படுகின்றன. அதனால், கொசுக்களை ஈர்ப்பது குறைவாக உள்ளது.
கட்டடங்களின் உயரம், நீர் வடிகால் கட்டமைப்பு மற்றும் நீர் தேங்கும் இடங்களில் இருந்து எவ்வளவு தூரத்தில் கட்டடம் உள்ளது ஆகியவற்றின் மீதும் ஆய்வு கவனம் செலுத்தியது.
குறைவான உயரம், அதாவது 6.5 மீட்டருக்கும் 15 மீட்டருக்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் கட்டடங்கள் டெங்கி பரவ வாய்ப்பளிக்கின்றன. வீவக குடியிருப்புக் கட்டடங்களின் சராசரி உயரம் 37.5 மீட்டர் அல்லது 12 மாடி.
கடிக்கக்கூடிய பெண்ணின ஏடிஸ் கொசுக்கள் குறைவான உயரம், அதாவது தாவரங்களின் உயரத்திற்குச் சற்று மேல் வரை பறக்கக்கூடியவை. அவற்றின் உடலமைப்பு அப்படி என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
அந்த அறிக்கை ‘வைரஸஸ்’ என்னும் அறிவியல் சஞ்சிகையில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.