மரினா பே வட்டாரத்தில் புத்தாண்டை வரவேற்க டிசம்பர் 31ஆம் தேதி மாலை திரண்டு சென்ற கூட்டம் சிங்கப்பூர் முழுவதும் அப்போது பெய்த மழையைப் பொருட்படுத்தவில்லை.
மாலை 5 மணியிலிருந்து தூறல் விழுந்தாலும் மரினா பே சேண்ட்சில் உள்ள ‘தி ஷாப்ஸ்’ முன் மக்கள் ஒன்றுகூடினர்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தை புதிய தொழில்நுட்பக் காட்சிவழி காண அந்த இடமே அவர்களுக்குப் பொருத்தமாக இருந்தது. அங்கிருந்த பலரும் குடையுடனும் மழைக்கவசத்துடனும் காணப்பட்டனர்.
“மழையில் ஒன்றுகூடியது இன்பமாக இருந்தது,” என்று கேத்தி லீ, 28, என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறினார்.
மாலை 6 மணிக்கே மரினா பே வட்டாரத்தை அடைந்துவிட்டதாகக் கூறிய அவர், மழைக்காக வீடு திரும்பியிருந்தால் தமக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும் என்றார்.
இல்லப் பணிப்பெண்ணான ஜோசீ வால்டெஸ், 50, என்பவர், 2022ல் இரவு 8 மணிக்கு வந்தபோது வாணவேடிக்கையைக் காண இடம் கிடைக்கவில்லை என்றும் அதனால் இம்முறை மாலை 5 மணிக்கே வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிய காவல்துறை, சில நீர்முகப்பு (வாட்டர்ஃபிரண்ட்) வட்டாரங்களுக்குச் செல்வதற்கான வழி அடைக்கப்பட்டுவிட்டதாக இரவு 8 மணியளவில் ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.
கூட்டம் அதிகம் சேருவதைத் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் அவ்வாறு செய்யப்பட்டதாக காவல்துறை தமது பதிவில் விளக்கி இருந்தது.
அதற்கேற்ப மெர்லயன் பூங்கா, ஒன் ஃபுல்லர்ட்டன், ஜூபிலி பாலம், யூத் ஒலிம்பிக் பார்க், த லான், புரோமோண்டரி வாட்டர்ஃபிரண்ட், எஸ்பிளனேட் வாட்டர்ஃபிரண்ட், ஃபுல்லர்ட்டன் வாட்டர்ஃபிரண்ட், மரினா பே வாட்டர்ஃபிரண்ட் போன்றவற்றை அடைவதற்கான வழி அடைக்கப்பட்டு இருந்தது.
பெருங்கூட்டம் திரண்டிருந்த காரணத்தால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை பேஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் சென்றன.
கிட்டத்தட்ட 600 காவல்துறை அதிகாரிகள் சட்டையில் அணிந்த கேமராவுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இரவு நேரம் செல்லச் செல்ல மழை தணிந்து வானம் தெளிவானது. 12 நிமிட நேர வாணவேடிக்கையைத் தெளிவாகக் காண அது உதவிபுரிந்தது.
புத்தாண்டடை வரவேற்க தீவு முழுவதும் குடியிருப்பு வட்டாரங்களிலும் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தென்கொரியாவின் இட்டாவோன் வர்த்தக வட்டாரத்தில் 2022 அக்டோபரில் ஹாலோவீன் திருவிழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 159 பேர் உயிரிழந்த பின்னர் விழாக்கால கூட்டம் என்பது அக்கறைக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அந்த விழாவில் 100,000 பேர் வரை திரண்டதாக மதிப்பிடப்பட்டது.
2023 புத்தாண்டை வரவேற்க 2022ஆம் ஆண்டு மரினா பேயில் ஏறக்குறைய 500,000 பேர் ஒன்றுகூடினர்.