சிங்கப்பூரில் ஆகப் பெரிய ஐந்து எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
பொருள், சேவை வரி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒரு விழுக்காடு கூடியது. அதனைத் தொடர்ந்து கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியிருப்பதாக ஃபியூவெல் காக்கி தளம் தெரிவித்தது.
ஃபியூவெல் காக்கி, சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் உருவாக்கிய எரிபொருள் விலையைக் கண்காணிக்கும் தளமாகும். கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் ஆகிய மூன்றும் லிட்டருக்கு மூன்று காசு வரை எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன.
ஆகக் கடைசி நிலவரப்படி சீனாவுக்குச் சொந்தமான சினொபெக், எஸ்பிசி இரண்டும் தாங்கள் விற்கும் எரிபொருளின் விலையை அதிகரிக்கவில்லை.
கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் ஆகியவற்றில் டீசல் விலை இரண்டு காசு அதிகரித்து 2.64 வெள்ளியாக உள்ளது. மூன்று நிறுவனங்கள் விற்கும் அனைத்து ரக பெட்ரோலின் விலையும் 2.78 வெள்ளியிலிருந்து 3.55 வெள்ளிக்கு இடைப்பட்டுள்ளது.