சிங்கப்பூருக்குள் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இறக்குமதி செய்த 983 மோட்டார் வாகனங்களுக்குச் சுங்க வரியையும் பொருள் சேவை வரியையும் செலுத்தாததன் தொடர்பில் 47 வயது டான் லாய் கிம் என்பவருக்கு ஜனவரி 2ஆம் தேதியன்று $3.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
‘ஸ்மார்ட் கார் ஆட்டோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இவர், அபராதத்தைச் செலுத்தத் தவறிய காரணத்தால் அதற்குப் பதிலாக 43 மாதச் சிறைத் தண்டனையை அனுபவிப்பார்.
மேலும், வாகனங்களுக்கான கூடுதல் பதிவுக் கட்டணத்தை $5,190,893 என்ற வித்தியாசத்தில் குறைத்துச் செலுத்தியதற்குக் கூடுதலாக ஏழு வாரச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 2ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.