இணைய வங்கிக் கணக்கை அவ்வப்போது சரிபார்க்கும் பழக்கம், தொழில்நுட்பர் ராமன் சங்கரை மீளா இழப்பிலிருந்து காப்பாற்றியது.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பிற்பகலில் நேரத்தில் வேலைக்குச் சென்றிருந்த திரு சங்கர், 61, கணினியின்மூலம் இணைய வங்கிக் கணக்கைத் தற்செயலாகத் திறந்து பார்த்தபோது தன் கணக்கிலிருந்து பல முறை பணமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டு திகைத்தார்.
உடனே அவர், டிபிஎஸ் வங்கிக்குக் கைப்பேசி மூலம் அழைத்து நடந்தவற்றைத் தெரிவித்தார். “எனக்குத் தெரியாமல், என் அனுமதியின்றி 12 பரிவர்த்தனைகளில் மொத்தம் 1,099.10 வெள்ளி மாற்றப்பட்டிருந்தது,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு கருதி வங்கி, திரு சங்கரின் கணக்கை முடக்கியது. அவர் அதே நாளில் அங் மோ கியோ வட்டாரக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். டிபிஎஸ் வங்கி இதுவரை சுமார் 300 வெள்ளி பணத்தை மீட்டு தனக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக திரு சங்கர் கூறினார். எஞ்சிய தொகையும் மீட்கப்படும் என்று நம்பிக்கையுடன் அவர் காத்திருக்கிறார்.
“நல்ல வேளையாக அனுமதியற்ற பரிவர்த்தனைகள் நடந்த அதேநாளில் அவை பற்றி அறிந்துகொண்டேன்,” என்றார் திரு சங்கர். “ஆனாலும் வங்கியே அதைக் கவனித்து என்னிடம் தகவல் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த இவர், 1993 முதல் சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி, 30 வயது மகள், 25 வயது மகன் ஆகியோர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
“மோசடியைப் பற்றி என் மகளிடம் தெரிவித்தேன். வங்கிக் கணக்கை இயன்றவரை அவ்வப்போது சரிபார்ப்பதன் நன்மையை இப்போது நன்கு உணர்ந்துகொண்டேன் என்று அவர் கூறினார்,” என்கிறார் திரு சங்கர்.
இதுபோன்ற மோசடிகளும் இணையக் குற்றங்களும் தொடர்ந்து அக்கறைக்குரிய விவகாரங்களாக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்களின் எண்ணிக்கை 2022ல் 33,669 ஆக உயர்ந்தது. ஒப்புநோக்க இது, 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 25.2 விழுக்காடு அதிகம். மோசடிச் சம்பவங்களில் முதலீட்டு மோசடிகளால்தான் ஆக அதிக இழப்பு ஏற்படுவதாக அது குறிப்பிடுகிறது.
வயதானவர் உட்பட அனைவருக்கும் இத்தகைய மோசடிச் சூழலை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் தேவைப்படுவதாக தொழில்நுட்பத் தொழில்முனைப்பு நிறுவனங்களுக்கான ‘எஸ்ஜி.டெக்’ அமைப்பின் தலைமை நிர்வாகி யீன் சோங் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
இத்தகைய மோசடிகளில் பெரும்பகுதி, வெளிநாடுகளில் தளம் கொண்ட மோசடிக்காரர்களால் செய்யப்படுபவை என்று காவல்துறையின் கடந்த ஆண்டின் வருடாந்திர மோசடி மற்றும் இணையக்குற்ற அறிக்கை குறிப்பிடுகிறது.
இத்தகைய சம்பவங்களை விசாரித்து குற்றம்சாட்டுவது சிரமமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோசடிக்காரர்கள் பன்னாட்டுக் கும்பல்களாக இயங்கி அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி இயங்குகின்றன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும் திரு சங்கரின் பழக்கம் சிறப்பானது என்று பாதுகாப்பு நிபுணரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம் தெரிவித்தார் .
“வங்கி அட்டைகளின் மறைச்சொல்லை அவ்வப்போது மாற்றுவது, பாதுகாக்கப்பட்ட இணையச் சேவைகளைப் பயன்படுத்துவது, நம்பகமான செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்வது போன்றவை நல்ல இணையப் பழக்கங்களாகும்,” என்று டாக்டர் ரஸ்வானா கூறினார்.