தமிழர் திருநாளாம் தைத் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், அப்பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட இந்திய மரபுடைமை நிலையம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6, 7, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் பல நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன..
இவ்வாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ‘சூரியன்’ என்ற கருப்பொருளை ஒட்டி அமைந்துள்ளது.
“ஒவ்வோர் ஆண்டும், இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் திருநாள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் பிறப்பில் தை மாதம் தொடங்குகிறது. இது புது விளைச்சலும் வளர்ச்சிக்கும் இடங்கொடுக்கும் தருணம் என்பதால், தமிழர்களான நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்,” என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை மேலாளர் மரியா பவானிதாஸ் கூறினார்.
லிட்டில் இந்தியா சாலையில் பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சி, கிராஞ்சி பண்ணையை பார்வையிடுதல், சிறுவர்களுக்கான பொங்கல் சார்ந்த கைவினை நடவடிக்கைகள் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், ‘ஃபுலூட்ஸ் இன் தி கேலரி’ எனும் இசை - நடன நிகழ்ச்சியும் பொங்கலைச் சமைத்து சுவைக்கும் செயல்முறை விளக்கமும் நடைபெற உள்ளன. இவ்வாண்டு கொண்டாட்டங்களில் நடைபெற இருக்கும் இவை இரண்டும் புதிய அம்சங்கள்.
“இந்திய மரபுடைமை நிலையத்தில் நடக்கவிருக்கும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது இதுவே என் முதல்முறையாகும். பொங்கல் என்பது ஓர் எளிமையான இனிப்பு வகை. பொங்கலின் எளிமையைப் பாராட்டி, அதன் சுவையும் செய்முறையும் பல மக்களிடம் சேர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்றார் சமையற்கலை வல்லுநரும் உணவு விநியோக வணிகரான அனில் ரவீந்திரன்.
இதனிடையே, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை நிலையமும் (லிஷா) பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சில நிகழ்ச்சிகளுக்குக் கட்டணமில்லை. சில நிகழ்ச்சிகளுக்கு $10 முதல் $18 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மேல்விவரங்கள் அறிய, இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையத்தளத்தை அல்லது சமூக ஊடகங்களை நாடலாம்.