ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானத் தளத்தில் வியாழக்கிழமை அதிகாலை, 7.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.
மியன்மாரைச் சேர்ந்த அந்த 27 வயது ஊழியர், கட்டி முடிக்கப்படாத தளமேடை ஓரத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் விழுந்தார்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 75க்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
புளோக் 749 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 73ல் உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது.
‘ஜியாங்ஸி கன்ஸ்ட்ரக்ஷன் டெவலப்மண்ட்’ நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த ஊழியர், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயங்கள் காரணமாக அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது. திட்ட மேம்பாட்டாளரான நிலப் போக்குவரத்து ஆணையம், விசாரணைக்கு உதவி வருகிறது.