லசாடா நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சிறந்த அனுகூலங்களை வழங்க உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்கிறது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் இரு வார சம்பளம் பெறுவார்கள் என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரசும் உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமும் ஜனவரி 6 அன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தது. இச்சங்கம் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் ஒரு துணை அமைப்பாகும்.
“சங்கம் இது திருப்திகரமானது அல்ல என்று கருதுவதாகவும் பாதிக்கப்பட்ட தகுதிபெறும் ஊழியர்களுக்குக் கூடுதல் அனுகூலங்கள் பெற்றுத்தர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூட்டறிக்கை தெரிவித்தது.
தொழிற்சங்கத்திற்கும் லசாடாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை வழிநடத்தியதாகவும் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மனிதவள அமைச்சு ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை கூறியது.
லசாடா நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தபோதிலும், ஜனவரி 3ஆம் தேதி தொழிற்சங்கத்திடம் தெரிவிக்காமல் ஆட்குறைப்புச் செய்தது. எத்தனை பேர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர் என்பதையும் அது தெரிவிக்கவில்லை.
நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் மலேசியா, இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள அதன் வட்டார அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு இடம்பெற்றுள்ளது.
லசாடா வின் தாய் நிறுவனமான அலிபாபா இன்டர்நேஷனல் டிஜிட்டல் கமர்ஸ், 2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடப் போகிறது என்ற ஊகச் செய்திகளுக்கிடையே இந்த ஆட்குறைப்பு இடம்பெற்றுள்ளது. 2023 மே மாதம் இச்செய்தி முதலில் வெளிவந்தது.
ஆட்குறைப்பு குறித்து தங்களிடம் தெரிவிக்காததற்காக லசாடா மன்னிப்புக் கோரியதாக இரு சங்கங்களும் கூறின.
தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு போதிய ஆதரவு, தகுந்த ஆட்குறைப்பு அனுகூலங்களை வழங்குவது உட்பட மறுசீரமைப்பு நடவடிக்கை நியாயமாகவும் பொறுப்புடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக லசாடா நிறுவனம், அமைச்சுடனும் உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துடனும் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
நிறுவனம்,சிங்கப்பூர் அரசாங்கம், என்டியுசி, உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் , ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் “ஆக்கபூர்வமாக ஒத்துழைக்கிறது” என்று லசாடா செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“உள்ளூர் ஊழியர் சட்டங்களையும் எங்கள் ஊழியர்களின் நலனையும் நாங்கள் மதிக்கிறோம், ” என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மேலும் உதவி தேவைப்பட்டால் 6737 6088 என்ற எண்ணில் அல்லது fdawu@ntuc.org.sg என்ற எண்ணில் மின் அஞ்சல் வழியாக அணுகலாம் அல்லது என்டியுசியின் வேலை வாய்ப்புகளுக்கான வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்துடன் தொடர்புபடுத்தப் படலாம் என்று உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கூறியது.
“செலவுக்குறைப்பு நடவடிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும், அவ்வாறு செய்யும்போது அதிகப்படியான மனிதவள மேலாண்மை, பொறுப்பான ஆட்குறைப்பு குறித்த முத்தரப்பு ஆலோசனையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து முதலாளிகளுக்கும் மனிதவள அமைச்சு நினைவூட்டியது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்து லசாடா போன்ற தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
முதலாளிகள் தங்களது மறுசீரமைப்புப் பயிற்சிகள் குறித்து அமைச்சு உடன் கலந்தாலோசிக்கலாம், மேலும் விவரங்களுக்கு காண்க http://go.gov.sg/employment-practices-support-tamem.