வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்புப் பேட்டைகளின் சில பகுதிகள், பொதுப் பயன்பாட்டுக்கு மூடப்படுவது கடுமையான நடவடிக்கையாகத் தோன்றக்கூடும்.
ஆனால் குடியிருப்பாளர்கள் அனைவரின் நலனில் சமநிலை காணவும் அந்த அம்சம் எளிதாகக் கருதப்படவில்லை என்பதை உணர்த்தவும் அத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று தேசிய வளர்ச்சிக்கான துணை அமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராகிம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் தொடர்புகொண்டு, அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய தீர்வுகளைக் காண, நகர மன்றங்களும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நியமன உறுப்பினர் சையது ஹாருண் அல்ஹப்ஸ்யி, ஜனவரி 9ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குத் துணை அமைச்சர் பதிலளித்தார்.
குடியிருப்புப் பேட்டைகளின் பொது இடங்களில் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்த விட்டுக்கொடுத்தலின் அவசியத்தை டாக்டர் ஹாருண் வலியுறுத்தினார்.
பொது இடங்களை மூடுதல், அங்கு தடுப்பு அமைத்தல் போன்றவை சமரசத்திற்கு இடமில்லை என்று சொல்வதுபோல் தொனிப்பதாக அவர் கூறினார்.
வீவக குடியிருப்புப் பேட்டைகளின் பொது இடங்களை மூடுதல் குறித்து கடந்த சில மாதங்களாக இணையத்தில் குறைகூறல்கள் எழுந்துள்ளன.
“பொது இடங்களைப் பயன்படுத்தும்போது, பல்வேறு குழுக்களின் பலதரப்பட்ட தேவைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் இதன் தொடர்பிலான சிக்கல்களைக் கையாள வேண்டியிருக்கிறது,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.

