திரு ஈஸ்வரன் மீதான விசாரணை முற்றுப் பெற்றது

திரு ஈஸ்வரன் மீதான விசாரணை முற்றுப் பெற்றது

2 mins read
நாடாளுமன்றத்தில் பிரதமர் சார்பில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்
ef08dd7e-a13e-4fc4-a80a-d6636a86bbb5
லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்த அமைச்சர் ஈஸ்வரன். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைச்சர் ஈஸ்வரன் மீது மேற்கொண்ட விசாரணை முடிந்துவிட்டது.

அதன் அறிக்கை தற்போது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் விசாரணை குறித்து கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த கல்வி அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) அன்று மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் சார்பாக எழுத்தபூர்வமாக பதிலளித்த திரு சான் சுன் சிங், “இது குறித்து பொது வெளியில் மிகுந்த ஆர்வம் இருப்பதை நான் அறிவேன். இந்தப் பிரச்சினையில் முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்,” என்றார்.

லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு வலுக்குறைவற்ற, முழுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளது என்று கூறிய அமைச்சர் சான், அதன் அறிக்கை தற்பொழுது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தால் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

திரு ஈஸ்வரன் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவால் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திங்கட்கிழமை (ஜனவரி 9) அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சீன நாளிதழ் சாவ் பாவ் ஆகியவற்றுக்கு பேட்டியளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இந்த லஞ்ச, ஊழல் விசாரணை கவலைதரும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

அது வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த லஞ்ச, ஊழல் விசாரணை இதற்கு தொடர்பில்லாத வேறு ஒரு பிரச்சினையின் விசாரணையில் இருந்து வந்தது. இதன் தொடர்பில் வேறு எந்தப் பிரச்சினைக்காக திரு ஈஸ்வரன் விசாரிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்