ஜாலான் புக்கிட் மேராவில் நடைபெறும் கட்டாய காசநோய் பரிசோதனைக்கு 1,500க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்டனர்.
பரிசோதனைக்குத் தகுதி பெற்ற மக்கள் தொகையில் இது 93 விழுக்காடாகும்.
ஜனவரி 11ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை பரிசோதனை நடைபெறும்.
மேலும் 500 பேர் தாமாக முன்வந்து பரிசோதனைக்குப் பதிவு செய்து கொண்டனர்.
இவ்வட்டாரத்தில் பத்து புதிய காசநோய்ச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் சுகாதார அமைச்சு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 1, 3, ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை மற்றும் உணவு நிலையம், தோங் கெங் முதியோர் நடவடிக்கை நிலையம்@குவீன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு காசநோய் பரிசோதனை கட்டாயமாகும்.
இவ்வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு காசநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமைச்சு கூறியது.
காசநோய் ஆபத்து குறைவாக உள்ளவர்களுக்கு தாமாக முன்வந்து பதிந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது, நவம்பர் 2021க்கும் ஜனவரி 2024க்கும் இடையே சந்தை மற்றும் உணவு நிலையம், புளோக் 1, 2 போன்ற இடங்களில் 12 மணி நேரத்துக்கு மேல் இருந்தவர்களுக்கும் புளோக் 1, 3ல் முன்பு தங்கிய குடியிருப்பாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு பரிசோதனை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு காசநோய் பரிசோதனை நடத்துவதற்காக சந்தை, உணவு நிலையத்தில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கு ஜனவரி 11 முதல் 13 வரை வீடுதோறும் பரிசோதனை நடத்தப்படும்.
கடந்த 2022 பிப்ரவரிக்கும் 2023 ஜூலைக்கும் இடையே பத்து புதிய காசநோய் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வில் அவை ஒன்றையொன்று ஒத்து இருந்ததும் 2022ல் ஜாலான் புக்கிட் மேராவில் புளோக் 2ல் ஏற்பட்ட காசநோயுடன் அவற்றுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து சம்பவங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு தொற்ற வாய்ப்பில்லை என முடிவு செய்யப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற பரிசோதனையின்போது பேசிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் குழுமத்தின் இயக்குநரான பேராசிரியர் வெர்னன் லீ, கண்டறியப்படாத காசநோய்களை அடையாளம் காண கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை நடத்தப்படுகிறது என்றும் அவ்வாறு செய்வதால் காசநோய் பரவும் அபாயத்தை முடிந்தவரை தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.