ஹேவன் பாலர் மற்றும் மழலையர் பள்ளியில் எட்டுப் பிள்ளைகள் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வயிற்றுப்போக்கு, வாந்தி உட்பட இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் அப்பிள்ளைகளிடம் காணப்பட்டன.
இரண்டு குழந்தைகளுக்கு ஜனவரி 3 வயிற்றுப்போக்கு ஏற்பட்டபோது, முதன் முதலில் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன என்று பள்ளியின் தலைமை ஆசிரியயை ஏஞ்சலின் லியோங் கூறினார்.
அதைத் தொடர்ந்து, இன்னும் அதிகமான பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
இந்த வயிற்றுக் கோளாறு, கிருமித்தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.
என்றாலும், அடிப்படையான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக, அதிகாரிகள் பள்ளியைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள், பாதிக்கப்பட்ட சில குழந்தைகளிடமிருந்து மல மாதிரிகளைச் சேகரித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் (இசிடிஏ) சுகாதார அமைச்சும் நிலைமையை உற்று கண்காணிக்கின்றன.
குழந்தைகளுக்கும் ஊழியர்களுக்குமிடையே தொற்று பரவுவதைத் தடுக்க, சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வதன் அவசியத்தைப் பாலர் பள்ளிக்கு இசிடிஏ அறிவுறுத்தியுள்ளது.