சிங்கப்பூர் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் இந்த ஆண்டு பிற்பாதியில் பெரிய அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவிருக்கின்றன.
இஸ்தானா உள்ளிட்ட சில தேசிய நினைவுச் சின்னங்களை மறுசீரமைக்கும் திட்டம் குறித்து 2021ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் அறிவித்தார்.
இஸ்தானாவின் பிரதான கட்டடம் 1867ஆம் ஆண்டுக்கும் 1869ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. பின்னர் 1992ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டது என்று தேசிய மரபுடைமைக் கழகம், ஜனவரி 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
1990களில் இஸ்தானாவில் குறிப்பிடத்தக்க அளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குப் பிறகு அக்கட்டடத்தில் சிறிய அளவிலான சேதங்கள் காணப்படுவதாக கழகம் கூறியது.
தேசிய நினைவுச் சின்னமான இஸ்தானாவைப் பாதுகாக்க, வழக்கமான இடைவெளியில் மறுசீரமைப்பு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று அது கூறியது.
மேலும், அரசாங்க அலுவல்கள் இடம்பெறும் இடமாக அதைத் தக்கவைத்துக் கொள்ளவும், தேசிய, சமூக அளவிலான நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும் வகையில் பராமரிக்கவும் மறுசீரமைப்புப் பணிகள் அவசியம் என்பதை அது சுட்டியது.
மழை, காற்றின் ஈரப்பதம் போன்ற சுற்றுப்புற அம்சங்களால் கட்டடம் சேதமடைவதைத் தவிர்க்க இத்தகைய பணிகள் முக்கியம் என்பதைக் கழகம் சுட்டியது.
மறுசீரமைப்புப் பணிக்கான ஏலக்குத்தகைக்கு ஜனவரி 12ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த பல நிறுவனங்களிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான குத்தகை நிறுவனங்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். ஏலக்குத்தகை இவ்வாண்டின் பிற்பாதியில் வழங்கப்படும்.