லிம் சூ காங்கில் உள்ள இடுகாட்டுக்கு அருகே வலது பக்கம் திரும்பிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 21 வயதான மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
லாரி ஓட்டுநரான 59 வயது ஜுமாடி டாஃபிருக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வாகனம் ஓட்ட அவருக்கு எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
கவனமும் அக்கறையுமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். லாரியிலிருந்த பயணிகளைக் காயப்படுத்திய மேலும் இரு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
ஜுமேட் கழிவு நிர்வாக நிறுவனமொன்றின் லாரி ஓட்டுநர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022 ஏப்ரல் 15 அன்று மாலை 5.55 மணியளவில், ஜுமாடி முஸ்லீம் இடுகாடு பாதை 17 வழியாக லிம் சூ காங் சாலையை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். அவரது மனைவியும் மற்றொரு உறவினரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஐந்து குடும்ப உறுப்பினர்கள் லாரியின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
21 வயதான திரு கோ காய் இயோ, லிம் சூ காங் சாலை வழியாக லிம் சூ காங்கின் கடைசிப்பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திரு கோவுக்கு வழிவிடத் தவறிய ஜுமாடி, வலது பக்கமாக லாரியைத் திருப்பியுள்ளார்.
மோட்டார்சைக்கிளின் முன்பகுதி லாரியின் முன்பகுதியுடன் மோதி, லாரி இடது பக்கமாக திசைமாறியது. மோதிய வேகத்தில் திரு கோ சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஜுமாடிக்கு காயம் ஏதுமில்லை. அவரது மனைவிக்குக் கையில் எலும்பு முறிவும் கண்ணில் காயமும் ஏற்பட்டது. மற்றப் பயணிக்கு தலையில் அடிபட்டது.
காணொளி படக்காட்சிகளின் வழி, விபத்து நடந்தபோது மோட்டார் சைக்கிளோட்டி மணிக்கு 134 கி.மீ. முதல் 158 கி.மீ. வரையிலான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாக கணிக்கப்பட்டது. 70 கி.மீ. வேகத்தில் சென்றிருந்தால் மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
மோட்டார்சைக்கிள் வருவதை 94 மீட்டர் முதல் 160 மீட்டர் வரையிலான தூரத்தில் கவனித்து, லிம் சூ காங் ரோட்டுக்கு திரும்பும் முன் லாரி ஓட்டுநர் காத்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.