மியன்மார் ராணுவத்துக்கு ஆயுதம் விற்பனை செய்யும் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியபோது தன்னிடம் அரை மில்லியன் வெள்ளி இருப்பதை அதிகாரிகளிடம் தெரிவிக்காத காரணத்தால் அவருக்கு அண்மையில் அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது பெயர் கியாவ் மின் ஊ, 41, என்பதையும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் விதித்த தடை உத்தரவில் அவரது பெயரும் இருந்தது என்பதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.
2023 ஜூன் 15ஆம் தேதி கியாவ் சாங்கி விமான நிலையம் ஒன்றாம் முனையத்தில் மேலும் இரு மியன்மார் நாட்டவர்களான 41 வயது வாய் சார் துன், 42 வயது வின் மியின்ட் ஆகியோருடன் பிடிபட்டார். அவர்கள் $20,000 மேற்பட்ட பணத்துடன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயல்கிறார்கள் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
வாய் வைத்திருந்த பயணப் பையில் $250,000 பணம் இருந்தது. வின்னிடம் உள்ள பையில் $249,000 ரொக்கம் இருந்தது. கியாவ் தன்னிடம் $9,925 வைத்திருந்தார் என்று காவல்துறை ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. கியாவுக்கு $10,000 அபராதமும் மற்ற இருவருக்கும் தலா $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தாய்லாந்தில் உள்ள மியன்மார் செய்தியாளர்கள் இராவாடி செய்தித் தளத்தில் ஜனவரி 8ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், கியாவ் தற்போது மியன்மாரை ஆட்சி புரியும் ராணுவத்துக்கு ஆயுதங்களை விநியோகம் செய்பவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மியன்மாரில் உள்ள கியாவின் நிறுவனத்தின் வர்த்தகப் பங்காளி வாய் என்றும் வின், சிங்கப்பூரில் கியாவின் வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரி என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹெலிகாப்டர் வர்த்தகம் மற்றும் விமானத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் இயக்குநராக வின் பொறுப்பு வகித்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. அந்நிறுவனங்கள் அனைத்தும் 2014 முதல் 2017 வரை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கியாவ் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்படவில்லை என்றும் அவர் தானாகத்தான் இங்கிருந்து வெளியேறினார் என்றும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.