சுற்றுப்புற மாசு சட்டத்தை மீறியது தொடர்பாக தெங்கா வட்டாரத்தில் புதிய தொடக்கப்பள்ளி ஒன்றைக் கட்ட நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
டிரஸ்ட்-பில்ட் இஞ்சினியரிங் அண்ட கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கட்டுமானத் தளங்களிலிருந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் மண், கற்கள் போன்றவை விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான அனுமதியைப் பொதுப் பயனீட்டுக் கழகத்திடமிருந்து பெறாமல் ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதாக அறியப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள நீர்நிலைக்குள் கட்டுமானத் தளத்திலிருந்து மண், கற்கள் போன்றவை விழுந்து நீரை மாசுப்படுத்தியதாகக் கல்வி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
கட்டுமானத் தளத்தில் விதிமீறல்கள் ஏற்படாமல் இருக்க ஒப்பந்ததாரர், நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு, அரசாங்க அமைப்புகள் ஆகியோருடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
பைனியர் தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டடத்தைக் கட்ட டிரஸ்ட்-பில்ட் நிறுவனத்தை கல்வி அமைச்சு நியமித்தது.
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்திலிருந்து தெங்காவுக்கு அப்பள்ளி 2026ஆம் ஆண்டில் இடம் மாறும்.
அதுவே தெங்காவில் கட்டப்படும் முதல் தொடக்கப்பள்ளி ஆகும்.
ஒப்பந்ததாரரின் விதிமீறல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஜூரோங் கால்வாய் சேறும் சகதியுமாக மாசடைந்திருந்ததைக் கண்ட இயற்கை ஆர்வலரான 50 வயது திரு ஜிம்மி டான், அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டார்.
பைனியர் தொடக்கப்பள்ளிக்கான கட்டுமானத் தளத்திலிருந்து மண், கற்கள் போன்றவை அருகில் உள்ள நீர்நிலைக்குள் விழந்ததே காரணம் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
டிசம்பர் 25ஆம் தேதியன்று திரு டான், மீண்டும் கட்டுமானத் தளத்துக்குச் சென்று காணொளி எடுத்தார். பெருமளவிலான மண் தோண்டியெடுக்கப்பட்டிருந்ததும் அது முறையான வகையில் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் அதில் காண முடிந்தது.
அண்மையில் கட்டுமானத் தளத்தைப் பொதுப் பயனீட்டுக் கழகம் சோதனையிட்டபோது நீர்நிலைக்குள் மண், கற்கள் போன்றவை விழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான அனுமதி பெறாமல் டிரஸ்ட்-பில்ட் நிறுவனம் பணிகளைத் தொடங்கிவிட்டது தெரியவந்ததாகக் கழகத்தின் நீர்ப்பிடிப்பு, நீர்நிலைகள் துறையின் இயக்குநர் திரு இயோ கெங் சூன் தெரிவித்தார்.
கட்டுமானத் தளத்திலிருந்து மண், கற்கள் போன்றவை அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் விழாமல் இருக்க நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக அவர் கூறினார்.
இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய ஒப்பந்ததாரர் செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் இம்மாதத்துக்குள் செய்துவிட வேண்டும் என்றும் கழகம் கூறியது.
ஒப்பந்ததாரருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.