கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, சிங்கப்பூர் போஸ்ட் தலைமை நிலையத்தை வந்தடைந்த அஞ்சல் பொட்டலத்தில் சட்டவிரோதப் பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், ஜனவரி 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
ஊடுகதிர் பரிசோதனையில் சந்தேகம் எழுந்ததால் அதிகாரிகள் கூடுதல் சோதனை நடத்தியதாக ஆணையம் கூறியது.
மூன்று சிறிய பாக்கெட்டுகளில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்களையும் ஐந்து ‘எல்எஸ்டி’ வில்லைகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சிங்கப்பூரில் ‘எல்எஸ்டி’ வில்லை என்பது கஞ்சா, ஹெராயின் போன்றே தடைசெய்யப்பட்ட போதைப்பொருளாகக் கருதப்படுகிறது.
‘எல்எஸ்டி’ வில்லைகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம். அதிபட்சமாக 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்
இணையத்தில் பொருள் வாங்கும்போது நம்பகமான விற்பனையாளரிடமிருந்து பொருள் வாங்குவதையும் இறக்குமதியாகும் பொருள்கள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியது.
போதைப்பொருள்கள் சிக்கியது தொடர்பான விசாரணை தொடர்கிறது.