குழந்தையை முறையற்ற வகையில் தள்ளியதற்காக பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இது குறித்து ஜனவரி 16ஆம் தேதி விளக்கமளித்த பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஒருவர், கம்பியைப் பிடித்து ஏற முயற்சி செய்த குழந்தையைத் தடுத்து நிறுத்துவதற்காக பொருத்தமற்ற முறையை ஆசிரியர் கையாண்டுள்ளார் என்றார்.
கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் இந்தச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.
“2024 ஜனவரி 3ஆம் தேதி தாழ்வாக இருந்த சன்னல் கம்பியைப் பிடித்து குழந்தை ஏற முயற்சி செய்தது. அப்போது ஆசிரியர் குழந்தையை சன்னலிலிருந்து விலகியிருப்பதற்காகத் தள்ளிவிட்டுள்ளார் என்றார் பேச்சாளர்.
தரைவிரிப்பில் விழுந்த குழந்தை பக்கவாட்டில் உருண்டது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை கண்காணிப்புச் சாதனங்களை ஆராய்ந்தது. அப்போது அந்தச் சம்பவம் கண்டுபிடிக்கப்படவில்லை.
பாலர் பள்ளியில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து கண்காணிப்புச் சாதனங்கள் மீண்டும் சோதனையிடப்பட்டன. அப்போது சம்பவத்தின் விவரம் தெரிய வந்தது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளியில் அந்த சம்பவம் நடந்தது.
ஜனவரி 10ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிறுவனின் தந்தை, தனது மகனின் வலது காதோரத்திலும் முகத்திலும் சிராய்ப்புக் காயம் இருந்ததாகத் தெரிவித்தார்.
அவர்களின் 22 மாதக் குழந்தையை பாலர் பள்ளியில் சேர்த்த நான்கு நாளில் இது நிகழ்ந்துள்ளது.
கவலையடைந்த தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார்.
மருத்துவரிடம் குழந்தையைக் காட்டியபோது ரத்தக்கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.