தனது மகளை, மகன் பாலியல் ரீதியாகத் தாக்கியதைக் கண்ட தாய் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.
அச்சம்பவம் நிகழ்ந்தபோது மகள், தனது சகோதரி என்று நினைவில் கொள்ளுமாறு மகனுக்கு நினைவூட்டி மட்டும் இருக்கிறார். அப்போது மகளின் வயது 12.
மகள் கர்ப்பமானபோது வயிற்றில் இருந்த கரு தனது மகனால் உருவானது என்று அச்சம் கொண்ட தாய், கருவைக் கலைக்க மகளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
குற்றவாளியான 45 வயது தாய், தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) ஒப்புக்கொண்டார். சிறார், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகனுக்கு 11 ஆண்டு, 6 மாதச் சிறைத் தண்டனையும் ஏழு பிறம்படிகளும் விதிக்கப்பட்டன.
2010ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் அண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மகன், தனது சகோதரியை பாலியல் தாக்குதல், வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மகளின் அடையாளத்தைப் பாதுகாக்க குற்றம் சுமத்தப்பட்ட தாய், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஆகியோரின் பெயர்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. தாய், மகன், மகள் மூவரும் ஒன்றாக வீவக ஈரறை வீட்டில் வசித்து வந்தனர். தாயும் மகளின் தந்தையும் விவகாரத்தானவர்கள்.