இந்த வட்டாரத்தில் பார்வையிழப்பு, பார்வைக் குறைபாடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையமும் (எஸ்என்இசி) உலகச் சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்படவிருக்கின்றன.
இது தென்கிழக்காசியாவில் மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு முயற்சியாகும்.
இந்தக் கூட்டு முயற்சி பற்றி ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் எஸ்என்இசி நிலையத்தின் உலகளாவிய கண்சிகிச்சைப் பிரிவு, உலகச் சுகாதார நிறுவனத்துடனும் மற்ற நாடுகளுடனும் இணைந்து செயலாற்றி, பாதுகாப்பான, அனைவருக்கும் எட்டக்கூடிய கண்சிகிச்சையை வழங்க உதவும்.
இத்திட்டத்தின் மூலம் எஸ்என்இசி, உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு நிலையம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இத்தகைய நிலையங்களுக்கு உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநரின் அங்கீகாரம் கிடைக்கிறது.
தற்போது இத்தகைய 800 நிலையங்கள் 80க்கு மேற்பட்ட உறுப்பு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
“இந்த ஒத்துழைப்பு முயற்சியின் மூலம் தனது உலகளாவிய கண்சிகிச்சைப் பிரிவு, இவ்வட்டாரத்தில் அதிகரித்து வரும் கண் பராமரிப்பு ஊழியரணிக்கு ஆதரவளிக்கும். மேலும் பார்வையிழப்பைத் தடுக்க அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளுக்கும் தொழில்நுட்ப உதவியளிக்கும்,” என்று சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையம் தெரிவித்தது.
உலகில் தற்போது 40 மில்லியன் மக்கள் பார்வையிழந்தவர்களாக உள்ளனர். அவர்களில் தென்கிழக்காசியாவில்தான் அதிக விகிதத்தில் உள்ளனர். அவர்களில் 28 விழுக்காட்டினரின் பார்வை குறைபாடு தவிர்க்கப்படலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் 2022ல் வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ள நீ ஆன் கொங்சி அரங்கில் சனிக்கிழமை (ஜனவரி 20) நடைபெற்ற 37வது சிங்கப்பூர்-மலேசிய கண்மருத்துவ கூட்டுக் கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “கண்சிகிச்சை துறையில் நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை இந்தக் கூட்டு முயற்சி பறைசாற்றுகிறது. அதில் முக்கியமாக, உள்ளூரிலும் இவ்வட்டாரத்திலும் கண் பராமரிப்பிலும் அதன் தொடர்பான கல்வியிலும் எஸ்என்இசி பல வழிகளில் உதவ முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.
அரங்கில் குழுமியிருந்த சுமார் 600 பேராளர்கள் முன்னிலையில் பேசிய சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் விவியன், “இந்த கூட்டுத் திட்டத்தை தென்கிழக்காசிய முயற்சியாக விரிவுப்படுத்தி, அதன் மூலம் கண் பராமரிப்பு தொடர்பான கல்வி, பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை இவ்வாட்டரம் முழுமைக்கும் கொண்டு செல்வதே என் விருப்பம்,” என்றும் கூறினார்.
இதன் தொடர்பில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய எஸ்என்இசியின் தலைமை நிர்வாகி பேராசிரியர் அவுங் டின், “பார்வையிழப்பு, பார்வைக் குறைபாடு பிரச்சினைகள் பல நாடுகளைப் பாதித்துள்ளன. நல்லவேளையாக, சிங்கப்பூரில் உள்ள மிகச் சிறப்பான கண் பராமரிப்பு வசதிகளால் கண் தொடர்பான நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. ஆனால், தென்கிழக்காசிய நாடுளில் இந்நிலைமை இல்லை என்பது கவலையளிக்கிறது. இந்நிலையை மேம்படுத்த நாங்கள் எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுப்போம்,” என்றார்.