உச்சநேரத்தின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் முயற்சியாக 2020ஆம் ஆண்டில் அறிமுகமான நடவடிக்கைகளுக்குப் பிறகு, புக்கிட் தீமாவில் உள்ள சில பள்ளிகளுக்கு வெளியே நிலவும் போக்குவரத்து நிலவரம் சற்று மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் உள்செல்வதையும் வெளிவருதலையும் வெவ்வேறு நேரங்களுக்கு மாற்றியமைத்ததும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப் பள்ளி இருக்கும் ஹில்கிரஸ்ட் ரோட்டை ஒருவழிச் சாலையாக மாற்றியதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் உள்செல்லுதல், வெளிவருதல் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பல்லாண்டுகளாக அந்தப் பகுதியில் நிலவி வந்தது.
அப்பள்ளி பிரதான டன்யர்ன் ரோட்டுக்கு அருகில் உள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள நன்யாங் பெண்கள் உயர்பள்ளி, தேசிய தொடக்கக் கல்லூரி ஆகியவற்றுக்குச் செல்வதும் மிகுந்த சவாலாக இருந்தது.
மாணவர்களின் பெற்றோர் டன்யர்ன் ரோட்டிலிருந்து பிரியும் இருவழிச் சாலையாக உள்ள ஹில்கிரஸ்ட் ரோட்டைப் பயன்படுத்தி, பள்ளி வளாகங்களுக்குச் செல்ல வேண்டும்.
ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வெளிவருதல் நேரம் பிற்பகல் மணி 1.20 என்றாலும் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் பிற்பகல் மணி 1.40க்குத்தான் அச்சாலையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
2023 ஜூனில் பெற்றோருக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அனுப்பிய ஆலோசனைக் குறிப்பில், பள்ளி பிரதான நுழைவாயில் பிற்பகல் மணி 1.40க்குத் திறக்கப்படும் முன் வாகனங்கள் டன்யர்ன் ரோடு, ஹில்கிரஸ்ட் ரோடு ஆகியவற்றில் நீண்டவரிசையில் காத்திருக்க அனுமதிக்கப்படாது என்று கூறியது.
இது குறித்து கருத்துரைத்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சரும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சிம் ஆன், “சாலைப் போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்பும்தான் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள அதிக அக்கறைக்குரிய நகராட்சிப் பிரச்சினையாகும்.
“பாதசாரிகள், வாகனமோட்டிகள், வருகையாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கிடையே ஒரு நியாயமான சமநிலையைக் காண வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நானும் எனது தொண்டூழியர்களும் பல்வேறு வகையான போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். மேலும் புதிய பிரச்சினைகள் தலைதூக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
சாலைகளை விரிவுபடுத்துதல், போக்குவரத்து விளக்குகள் மாறும் நேரத்தை மாற்றி அமைத்தல் போன்ற பல்வேறு தீர்வு நடவடிக்கைகளையும் தான் எடுத்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.