தண்டனைச் சட்டப் பிரிவு 1871ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, அதாவது 153 ஆண்டுகளில் முதல் முறையாக தண்டனைச் சட்டப் பிரிவு 165ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் திரு எஸ். ஈஸ்வரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் இதுவரை யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்று நம்பப்படுவதாக சட்ட நிபுணர்களும் வழக்கறிஞர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். பொதுத் துறை ஊழியர் ஒருவர் பதவியில் இருக்கும்போது மற்றவர்களிடமிருந்து பரிசுப் பொருள்களைப் பெறுவது குற்றம் என்று பிரிவு 165 கூறுகிறது.
திரு ஈஸ்வரன் எதிர்நோக்கும் 27 குற்றச்சாட்டுகளில் 24, தண்டனைச் சட்டப் பிரிவு 165ன் கீழ் வருகின்றன.
பெரும் செல்வந்தரான திரு ஓங் பெங் செங்கிடமிருந்து $218,000 மேற்பட்ட மதிப்புடைய இசை நிகழ்ச்சி மற்றும் காற்பந்தாட்ட நுழைவுச் சீட்டுகளையும் பெற்றதாக திரு ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதி நடவடிக்கைக்கு இடையூறாக இருந்ததற்கான ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
திரு ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்ட 27 குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ள பொருள்கள், சலுகைகளின் மதிப்பு $380,000க்கு மேல் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஜனவரி 18ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் திரு ஈஸ்வரன், தம் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூறினார்.
“முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குவார் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல்களின்போது அவர் தனது மனதை மாற்றிக்கொள்ளக்கூடும்.
“விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல்களின்போது, திரு ஈஸ்வரன் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டால், சில குற்றச்சாட்டுகளைத் தாங்கள் மீட்டுக்கொள்ளலாம் என்று அரசுத் தரப்பு கேட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. அதே சமயத்தில் சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு தற்காப்புத் தரப்பு, சில குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ள அரசுத் தரப்பைக் கேட்டுக்கொள்ளலாம்,” என்றார் என்யுஎஸ் சட்டப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பென்னி டான்.