2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மூன்று அடித்தள ஆலோசகர்களின் உற்சாகப் பங்கேற்புடன் பல்லினக் கொண்டாட்டமாக ஜனவரி 20ஆம் தேதி, மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை இடம்பெற்றது 17வது புக்கிட் பாஞ்சாங் பொங்கல் திருவிழா.
புக்கிட் பாஞ்சாங் குடிமக்கள் ஆலோசனைக் குழு (சிசிசி) , புக்கிட் பாஞ்சாங் பழைய, புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் (ஐஎன்சி) இணைந்து இவ்விழாவை ஆண்டுதோறும் நடத்திவருகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்றினால் ஈராண்டுகளாக சிறிய அளவில் நடைபெற்ற இவ்விழா, இவ்வாண்டு மீண்டும் பெரிய அளவில் நேரடி நிகழ்ச்சியாகத் திரும்பியது.
விழாவிற்கு ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட 20 முதியோர் சிறப்பு சேர்த்தனர். சிங்கப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியை வழிநடத்தினார் படைப்பாளர் ஜிடி மணி.
உறுமி மேளம், மயிலாட்டத்தோடு வெளியுறவு அமைச்சரும் ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவா ஆகியோருக்குக் கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.
அழகான பொங்கல் மாடுகளுக்கு மூவரும் உணவு கொடுத்துவிட்டு, தீபமேற்றி விழாவைத் தொடங்கிவைத்ததும் அவர்கள் வடை, தோசை சுடுதல், முறுக்குப் பிழிதல், பொங்கல் தயாரித்தல், உரல், உலக்கையில் நெல் குத்துதல், போன்றவற்றில் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்தனர்.
60க்கும் மேற்பட்ட சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மற்றும் சுவா சூ காங் மொழி நிலைய மாணவர்களின் பொங்கல், பாரம்பரிய விளையாட்டுச் சாவடிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தின் வெளிப்பாடாக விழாவில் பல்லினக் கலைஞர்களும் பொதுமக்களும் பங்குபெற்றதை மெச்சினார் டாக்டர் விவியன்.
“சிங்கப்பூரில் நாம் ஒவ்வோர் இனத்தவரின் பண்பாட்டினையும் மதிக்கின்றோம் - அதற்கும் மேலாக, கொண்டாடவும் செய்கிறோம். அடுத்த தலைமுறைக்கும் பல இன சமுதாயத்தை எடுத்துச் செல்வதில் இதுபோன்ற விழாக்கள் பெரும் பங்களிக்கின்றன,” எனப் பாராட்டினார் திரு சியா.
“பொங்கல் விழா நம் சிங்கப்பூரர்களின் மரபைக் கட்டிக்காப்பது மட்டுமன்றி, சமுதாயம் முழுவதும் செழிக்க நம் உள்ளத்தில் பொங்கும் கருணையையும் குறிக்கிறது,” என்றும் கூறினார் திரு லியாங்.
சிங்கப்பூர் சாதனைப் புத்தக முயற்சி
ஆக அதிகமானோர் அமர்ந்து செய்யும் நாற்காலி யோகா உடற்பயிற்சி அங்கம் மூலம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியும் இடம்பெற்றது.
இதற்கு முன்பு, பொங்கல் பானைகளால் செய்யப்பட்ட ஆக நீண்ட சீன நடனக் கடல்நாகம், ஆகப் பெரிய பொங்கல் பானை, ஆகப் பெரிய முளைப்பாரித்தொட்டி ஊர்வலம், ஆகப் பெரிய அளவில் உரல், உலக்கையில் நெல் குத்துதல், ஆக அதிகமானோர் ஒன்றாகப் பொங்கல் வைத்தல் போன்ற சாதனைகளுக்காக மொத்தம் 15 முறை சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் வகித்துள்ளது புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா.
“ஒவ்வோர் ஆண்டும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, புதிய சாதனைகளைப் படைக்க விரும்புகிறோம்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் ‘ஐஎன்சி’ தலைவர் திரு மூர்த்தி.
ஜனவரி மாதக் குழந்தைகளுக்கு கேக் வெட்டுதல், வண்ணம் தீட்டுதல், பல்லின உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடல், அறுசுவை உணவு, எனப் பலவித அங்கங்களும் சிறப்பாக நடந்தேறின.
பொங்கல் விழாவைத் தொடர்ந்து, புக்கிட் பாஞ்சாங் வருடாந்தர ரத்த தான முகாமும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்றது. அதில் 50 ரத்த நன்கொடையாளர்கள் பங்குபெற்றனர்.